மறுநாள் பொழுது புலரும் நேரம்….தாங்கள் தங்கி இருக்கும் சத்திரம் அருகில் வந்து தன்னை சந்திக்குமாறு பொன்னிவச்சானிடம் தெரிவித்துவிட்டு பராக்கிரமனோடு சத்திரமும் திரும்பிவிட்டாள்.
“நாளை முதல் என் தீர்ப்பு அமலாக்கப்படும் ருயமரே” என்ற பராக்கிரமனின் வார்த்தைக்கு “அதை நாளை பார்த்துக் கொள்ளலாம்” என விடையையும் சொல்லி வைத்தாள்.
மறுநாள் பொழுது புலர்ந்தும் புலராமலுமான அந்த இருள் கவிழ்ந்த நேரத்தில் பொன்னிவச்சானை மானகவசருடன் சந்தித்த ருயம்மா தேவி….. அந்த புதுமணமகனுக்கு ஒரு பரிசு கொடுத்தாள்.
வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புட்பராகம், கோமேதகம், மற்றும் நீலமாகிய நவரத்திங்கள் வரிசை வரிசையாய் பதிக்கப்பட்ட இரண்டு கை கடகங்கள். மூன்று விரற்கிடை அகலத்தில் இருந்தன அவை.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
அதைக் கண்ட கணமே அது அரச குல நகை….அதன் விலை மதிப்பு ஏராளம் என்பதை புரிந்து கொண்ட பொன்னிவச்சான்… சரேலென பின்வாங்கினான்.
“பெருமானே….உதவி என்பது வேறு…..இது வேறு…..” என உணர்ச்சி மிகுதியோடு அவைகளை மறுக்கவும் செய்தான்.
இப்போது “வச்சனாரே…..நான் பிறந்த தினத்திலிருந்து என்னோடு இருப்பவை இவை…….என் மனதிற்கு அத்தனை நெருக்கமான இதை நான் தருகிறேன் என்றால் நீர் கொடை கொள்ளும் தாழ்ந்த நிலையில் இருக்கிறீர் என்பதல்ல பொருள்….. இவ் விவாஹம் எனக்கு அத்தனை முக்கியம் என்பதே அர்த்தம்…. “ என்றபடி அருகில் நின்ற மானகவசனை ஒரு கணம் பார்த்துக் கொண்ட காகதீய இளவரசி….
“ஆண்கள் ஆளாளுக்கு ஒரு கொள்கை வைத்துக் கொண்டு அதற்காக ஒரு தாயற்ற சிறுபெண்ணை வதைக்க வேண்டாம்….இதைக் கொண்டு மஞ்சிகைக்கு பரிசமிடும்….அவளது தந்தை ஏற்றுக் கொள்வார்..” என்று முடித்தாள்.
பின் அதன் தொடர்ச்சியாய்….”உமக்கு அத்தனையாய் இதற்கு மணம் ஒப்பவில்லை எனில்… இதை எனது கடனாக வைத்துக் கொள்ளும்….உமது வணிகத்தில் உம்மால் மஞ்சிகையின் தந்தை மெச்சுமளவு அவளை வாழவைக்க முடியுமென்ற நம்பிக்கை உமக்கு இருக்கிறதல்லவா….. சில திங்கள் கழித்து பெண் கேட்டால் மஞ்சிகையின் தந்தையே ஒப்புக் கொள்வார் என்றுதானே சொல்லிக் கொண்டிருந்தீர்…..அத்தகைய செல்வ நிலை வரவும்…..இதை பாண்டிய வேந்தர் பராக்கிரமரின் அரண்மணையில் கொண்டு வந்து மன்னரிடமே ஒப்படைத்துவிடும்….” என்று யோசனையும் சொன்னாள். அதற்கு மேல் பொன்னிவச்சானை எதையும் வாதாட விடாமல் “பரிச முறைகளுடன் மஞ்சிகையின் வீட்டிற்கு கிளம்புங்கள்….நாங்களும் அங்கேயே வந்துவிடுகிறோம்” என துரிதபடுத்தவும் செய்தாள்.
இவளை ஒரிவிதமாய் பார்த்த மானகவசன் வார்த்தையால் எதுவும் மொழியவில்லை.
அடுத்ததாய் காலை போஜனத்திற்குப் பின்….இவள் மாறுவேடத்திலிருந்த மானகவசருடன் சென்ற இடம் மஞ்சிகையின் இல்லம்….
பொன்னிவச்சானின் உற்றார் உறவினர் என ஒரு கூட்ட மக்கள் வந்திருக்க…. மங்கல பொருட்களுக்கு நடுவில் அந்த நவரத்தின கை கடகங்கள் வீற்றிருந்த பரிச தட்டை ஏந்தியபடி முதல் நபராய் மஞ்சிகையின் இல்லத்திற்குள் நுழைந்த பொன்னிவச்சானின் சகோதரியை வெகு மகிழ்ச்சியாகவே வரவேற்றார் மஞ்சிகையின் தகப்பனார்.
மஞ்சிகையின் இல்ல கூடத்தில் பெண்கள் பரிச முறைகளை மஞ்சிகைக்கு நிறைவேற்ற…..வெளியே முற்றத்தில் குழுமி இருந்த ஆடவர் கூட்டத்துடன் அமர்ந்திருந்த ருயம்மாதேவியோ….. அரையர் வைரவனை சாட்சியாய் வைத்து இன்றிலிருந்து மூன்றாம் தினம் திருமணம் என பேசி முடித்தாள்.
பரிசமிடுவதிலிருந்து மூன்று ஐந்து ஏழு ஒன்பது தினங்களிலெல்லாம் விவாஹம் செய்யும் வழக்கம் இருந்த காரணத்தால் ருயம்மா மூன்றாம் தினம் என்றதும் எளிதாகவே ஏற்றிக் கொண்டார் மஞ்சிகையின் தந்தை.
வயதில் வெகு இளமையாய் தோன்றினாலும் மன்னரின் உறவினர் என்ற ஒரு அடை மொழியே அவள் வார்த்தைக்கு அத்தனை கணத்தை கொடுக்க….. காரியம் இனிதே நிறைவேறியது…. அவளது காவலனாய் வந்திருந்த பராக்கிரமருக்கு மௌனமாய் இருப்பது மாத்திரமே இன்றைய பணி.