“ என் பேர் பொன்னிவச்சான்….” விடை கூறினான் அவ்வாலிபன்.
“அவள்?”
“என் அத்தை மகள் மஞ்சிகை”
“ம் …… அத்தை மகளா…? சரி போகட்டும்……மற்றுமொருப் பெண்ணை மாற்று ஜாதி ஆடவனுடன் அனுப்பி வைத்திருக்கிறாயே……. அது குற்றமில்லையா……? அதற்கு என்ன தண்டனை தெரியுமா…?.... அவள் எங்கிருக்கிறாள் என்பதை மட்டும் தெளிவாக சொல்லிவிடு…… உன்னைவிட்டுவிடுகிறேன்…….” பராக்கிரமன் இப்படி ஒரு நிபந்தனை விதிப்பான் என சற்றும் எதிர்பார்த்திராத ருயம்மா தேவியை அதிர்ச்சியும் சினமும் ஒருங்கே பீடிக்கிறதென்றால்…..
பீதியும் பெரும் வேதனையுமாயும் ஓடி வந்து தன் நாடாள்பவன் முன் முழந்தாழிட்டு பணிந்து கொள்கிறாள் அந்த மஞ்சிகை…. “ அதுமட்டும் வேண்டாம் வேந்தே…. அருளை என் பெரியம்மையின் மகள்….அவள் கண்ணீரில் தழைக்காது என் மணவாழ்க்கை…. எங்கிருந்தாலும் அவள் வாழ்ந்துவிட்டு போகட்டும்….” மன்றாடினாள்…
அதில் கிஞ்சித்தும் முகம் இளகா பாண்டிய மன்னன் ‘ சொல்கிறாயா இல்லையா ?’ என்பது போல் அந்த பொன்னிவச்சானைப் பார்க்க….அவனோ
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“ ஜாதிகள் பல இருந்தும் நம் முன்னோர் காலத்தில் சாதிப்பூசல்கள் இல்லை…. எச்சாதியினரும் விரும்பும் எவரையும் சாதி பேதமின்றி மணக்கும் வழக்கமே நம்மிடம் நிலவி வந்தது….. இடையில் வந்தது இந்த பிரித்தாளும் கொள்கையும், சாதி உயர் தாழ்வுகளும்…… பாண்டியர்கள் தலையெடுக்காதிருக்க சில சோழ மன்னர்கள் புகுத்திய பழக்கமிது…..
இதெல்லம் வேந்தர் பெருமானுக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை…..இருந்தும் நீர் இதை குற்றமென்று தீர்க்கிறீர் என்றால் உமது திட்டம் எனக்கு புரியவில்லை என்றாகிறது……
ஆயினும் எது எப்படியாயினும் பாண்டியரை அடக்கி ஆள கொண்டு வந்த இச் சாதி பிரிவினைக்கு என்னால் என்றுமே ஒப்புக்கொள்ள இயலாது….. அதுவும் என்னோடு வளர்ந்த என் சகோதரி போன்றவளின் வாழ்வை, என் சொந்த கரத்தாலே இச் சாதி காரணமாக கலைத்துப் போடுவது என்பது என்னால் கனவிலும் நினைக்க இயலா காரியம்…. ஆகவே தங்கள் உத்தரவுக்கு பணிய முடியாத நிலையில் இருக்கிறேன் வேந்தே…..” என கூர் வாளால் கிழித்த கோடு போல உரைத்தான் அவன்.
வினாடியும் தாமதிக்காது வந்து விழுகிறது மன்னன் மானகவசனின் தீர்ப்பு….” அவ்வாறானால். நாளை முதல் உன் அத்தை மகளாகிய மஞ்சிகையை நீ எந்நாளும் பார்க்க கூடாது….இது பாண்டிய வேந்தனின் இறுதித் தீர்ப்பு…”
அவ்வளவுதான்….அவ்வார்த்தையை அவன் கூறி முடிக்கும் முன்னும்….” ஐயோ பெருமானே வேண்டாம்…என் மாமனின்றி நான் ஒரு தினம் கூட உயிர்தரிக்க மாட்டேன்….தாயற்றவள் நான்….எந்நாளும் என் உலகமே அவர்தான்……” என கதறியபடி பராக்கிரமன் காலடியிலேயே மூர்சையுற்று சரிந்தாள் மஞ்சிகை…. வேந்தன் தீர்ப்பை விஞ்சும் தீர்ப்பு பாண்டியத்தில் ஏது என்பது அவளது கணிப்பு…
உருவத்தில் மட்டுமல்ல…..அகவையிலும் மஞ்சிகை ருயம்மா தேவிக்கு இளையவளாகவே இருக்க கூடும்….. அவளது சின்னஞ்சிறு உருவம் சரிவதையும்….அப் பால் வழியும் முகத்தில் படர்ந்துவரும் மரண வெறுமையை காணவும்…….மானகவசனின் தீர்ப்பினால் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ருயம்மா தேவியின் உள்ளமோ இப்போது தாய்மையோடும் கிளர்கிறது…..
ஆம் மானகவசனின் தீர்ப்பில் அவள் பற்றி எரிந்து கொண்டிருந்தாள்…. பாண்டிய மன்னர் மாற்று தேசத்தாளும் வேற்று ஜாதியளுமாகிய இவளை விவாஹம் புரியலாமாம்…. ஏதோ சமூக மாற்றம்…நீங்கள் சூத்திரர்கள் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறவர்கள் என என்னவெல்லாம் கதைகள் சொன்னார்…. ஆனால் அவரது பிரஜை அருகிலிருக்கும் அடுத்த ஜாதியினரை மணம் செய்யக் கூடாதாம்….அதற்கு உதவியருக்கே கூட தண்டனையாம்….
இதற்கெல்லாம் அடிப்படை என்ன? அந்த சிறுபெண் மஞ்சிகை அவள் தந்தை அறியாமல் தன் மாமனை சந்தித்திருக்கிறாள் என்ற சினம் இந்த மானகவசருக்கு….அதை இப்படியாய் காட்டுகிறார்…
மஞ்சிகை தாயற்றவள்….. காதலுமுற்றவள்….ஏதோ வந்துவிட்டாள்…. அதுவும் அவள் விரும்புவனும் ஒரு பொறுப்பற்றவனோ நம்பதாகதவனோ இல்லை…..இந்த சூழலில் கூட தன் மற்றுமொரு உறவுப் பெண் அருளையை விட்டுகொடுக்க அவன் தயாராக இல்லையே….. மணக்க இருக்கும் இவளுக்கு எதிராகவா எதாவது செய்துவிடுவான்….? அப்படி இருக்க இப்படி வந்ததை சரியென்று சொல்ல முடியாதென்றால்…..தவறு என்றும் சொல்ல முடியாதே….. இச் சந்திப்பென்ன அத்தனை பெரிய பாவமா? அதற்கு இப்படி ஒரு தண்டனையா?
சிறுத்தையென சீறுகிறது அவள் நெஞ்சம்…..அதே கணம் காலடியில் கசங்கிய வஸ்திரம் போல் கிடந்தவளை கையோடு அணைத்து எடுக்கவும் சொல்கிறது உள்ளம்…
ஆனால் அவளிருக்கும் ஆடவன் வேடத்தில் அது மஞ்சிகைக்கும் அவள் மாமனுக்கும் கூட வேதனை கொடுக்குமே…
ஆக “வச்சனாரே…..மஞ்சிகையை தூக்கி அவளுக்கு உதவி செய்யும்….. நாளை முதல் பார்க்க கூடாதென்பதுதான் தீர்ப்பு…..” என வந்து விழுகிறது அவள் முதல் கட்டளை….
ஆம் பாண்டிய பராக்கிரமனுக்கு எதிராக களமிறங்கி இருந்தாள் அவனை நேசிக்கும் ருயம்மா தேவி…. அவளது காதலின் அஸ்திவாரம் ஆடியதா என சொல்வதற்கில்லை….. அக்கணம் தன் காதலைப் பற்றியெல்லாம் சிந்தித்தும் கொண்டிருக்கவில்லை அவள்… ஆனால் நடந்து கொண்டிருக்கும் செயலில் நியாயம் இல்லை என்பது மாத்திரம் அவளுக்கு உறுதி….. அதை அனுமதிக்க அவளால் இயலாது….