அங்கு கனவில்…. ருயம்மா தேவிக்கு ஏறுதழுவல் எத்தகைய விளையாட்டு என தெரியவில்லை….. பராக்கிரமன் அது ஒரு வீர விளையாட்டு என சொல்லிய அளவில் ஒரு ஆவலில் கலந்து கொள்ள வந்திருந்தாள்……
ஒரே கூட்டமும் கும்பலுமாய் விழா கோலம் கொண்டிருந்தது அப் பரந்து விரிந்த நிலப்பரப்பு…..ஆண் பெண் முதியவர் இளையவர் குழந்தைகள் என அனைத்து தரப்பினருமாய் சேர்ந்திருந்த கூட்டமது…
சள சள சத்தத்துடன் மக்கள் வருவதும் போவதுமாயிருக்க…..அருகிலிருக்கும் ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வண்டி கட்டி வந்திருப்பார்கள் போலும்…. பல வித வண்டிகளும் அதன் மீது ஏறி நின்று வர இருக்கும் விளையாட்டை காண காத்திருப்போருமாய்….. ஜனசந்தடி.
ருயம்மாவுக்கு இது முற்றிலும் புது அனுபவம்….அரச குல மங்கையாய் அவளுக்கு கிடைத்திராத விடுதலையை இக் கணத்தில் முழுதாய் உணர்ந்து ரசித்தாள் சுகித்தாள்…
பராக்கிரமரின் வார்த்தையின்படி செல்லக் கிளியையும் அழைத்து வந்திருந்தாள் இவள்… அதில் இவளுக்கு உதவியாக என பராக்கிரமரின் வீரர்கள் மூவர் அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர்…..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்..
ஜனகூட்டத்திற்கு அருகில் வரும் வரை இயல்பாய் இருந்த செல்லக்கிளியை இப்பொழுது இரு புறமும் கயிறிட்டு இருவர் பிடிக்க வேண்டி இருந்தது….. நில் என்றால் நிற்காமல் முன்னும் பின்னுமாய் சற்று திமிறிய வண்ணமாய் அது…
இவளை போன்ற காளை உரிமையாளர்கள் அங்கங்கு கண்ணில் பட…..அவர்கள் வதனத்தில் இருந்த பெருமிதத்தை கவனித்துக் கொண்டாள் இவள்.
இது எத்தகைய விளையாட்டு என இவள் எண்ணமிடும் போதே….அருகில் வந்து நிற்கிறார் மானகவசர்.
முன்பு போல் இடையிலிருந்து பாதம் வரை தழைய கட்டியிருந்த உடையில் இல்லை அவர் இப்பொழுது….
இடையிலிருந்து முழங்கால் வரையிலுமாய்…..உடலோடு இறுக பிணைந்தபடி கட்டப்பட்டிருந்த வெண் துகிலில் அவர்…. வழக்கமாய் மார்பில் ஒற்றை புறமாய் சரியவிடும் வஸ்திரமும் இல்லை….வெற்று மார்பாய்….தோளில் தன் தங்கையின் பெயரிட்டிருந்த இடத்தில் சந்தனம் பூசி அதை மறைத்தவண்ணம் அவர்….
நேருக்கு நேராய் அவரை இவள் பார்வையிடும் போதே அவரது அருகில் காண கிடைக்கிறார் வரதுங்கன்…. அவரும் அவரது அண்ணன் போன்ற அதே உடையில்
‘இந்த வரதுங்கர் ஏதோ மும்மி மீது விருப்பம் என்றார்….இப்போதென்ன ஏதோ பெண்ணிற்காக இங்கு வந்திருக்கிறாரா?.... எத்தனை பெண்ணை மணப்பார் அவர்?’ என ஓடுகிறது இவளது சிந்தனை…
அதில் சற்று இவள் வதன சாயல் மாற்றம் கண்டதோ…?
“ குடிகளுக்கு போர் பயிற்சி வேண்டும் என்பதற்காகவும் போரற்ற காலங்களில் ஏறுதழுவல் சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகள் இங்கு நடந்து கொண்டே இருக்கும்….. அதாவது விவாஹ நோக்கம் இன்றியும் இதை விளையாடுவோர் உண்டு….” என இவள் மனம் உணர்ந்தார் போல் வரதுங்கனின் ஏறு தழுவல் நோக்கம் குறித்து தற்போது விளக்கிய பராக்கிரமன்
“நாங்கள் இருவரும் வெற்றி வாகை சூட வேண்டும் என வாழ்த்தும் ருயமரே” என சிறு சிரிப்புடன் கோரிக்கையும் வைத்தான்….
“வரதுங்கருக்கு மட்டும் வெற்றி உண்டாகட்டும்” என உடனடியாக வாழ்த்தினாள் ருயம்மா…..கூடவே “ஏது என்னை தோற்கடிக்க நானே வாழ்த்த வேண்டுமா…?” என்றாள் மானகவசரை நோக்கி…
“சில விஷயங்களில் தோல்வியில்தான் சுகமே இருக்கிறது…..” என ஒருவிதமாக இவளிடம் சொல்லிவிட்டு விடை பெற்றான் அவளவன்.
அதே கணம் “ஐ செல்லகிளி” என குழந்தையின் துள்ளலோடு அங்கு வந்து நின்றது சாட்சாத் மஞ்சிகைதான்…
மணகோலத்தில் இல்லையெனினும்……மண வேளை நகைகளில் பெரும்பான்மை அவள் மீது அமர்ந்திருக்க….. மூக்கிலிருந்த புல்லாக்கை கூட மாற்றாமல்….வேறொரு புதுபட்டுடுத்தி… தலை நிறைய பூ சரிய….குமரி உருவத்திலும்…..
ஆர்வத்தில் உருண்ட கண்களோடு சென்று திமிலோடு தன் காளையை கட்டிய விதத்தில் குழந்தை பருவத்திலுமாய் அவள்…
அவளை பார்க்க ருயம்மாவிற்கு ஆவலும் ஒரு வித ஆசையுமாய் இருந்தாலும் பெருமளவில் ஆச்சர்யமே….
“இங்கு என்ன செய்கிறாய் மஞ்சிகை……?” என வியப்பு பீறிட கேட்டாள் ருயம்மா…
“ வீட்டில் யாரும் அனுமதிக்கவில்லை எனினும்……பலர் கூடும் இடத்திற்கு பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் நான் செல்வது அவசியம் என மாமா பிடிவாதமாய் கிளம்பி வந்தாரா…… எனக்கும் உடன் வர அனுமதி கிடைத்து விட்டது…..எனக்கு இங்கு வர வெகு ஆசை பெருமானே……” என குதுகலித்தாள் அவள்…
இப்போது கண் உயர்த்தி ருயம்மா தேட….. ஜன கூட்டத்தில் நின்றிருக்கும் தன் மன்னவர் மீது பார்வை பதித்த வண்ணம் உயரமான ஒரு ஸ்தலத்தில் நின்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொன்னிவச்சான் இவள் கண்ணில் படுகிறான்…..
ஏதோ ஒரு வகையில் திருப்தியாகவும் சற்று நிம்மதியாகவும் இருக்கின்றது இவளுக்கு…… குலசேகர பட்டிணத்தில் இத்தனை நாள் தங்க நேர்ந்தது ஒரு எதிர்பாரா செயல்தானே……அதில் ஏற்ற அளவு மானகவசருக்கு பாதுகாப்பு இருக்கின்றதா என்ற ஒரு தவிப்பு இவளுக்கு உள்ளுக்குள் உண்டு….
அதே நேரம் ருயம்மாவின் பார்வையில் விழுகிறது அக் காட்சி…...தன் பாதுகாப்பை கவனமெடுத்திருந்த பொன்னிவச்சானை கண் சைகையால் ருயம்மா மீது கவனத்தை வைத்துக் கொள்ள பணித்தான் மானகவசன்….இளகினாள் ருயம்மா….. இருவருக்குள்ளும் என்ன வகையான ஒத்த மனம் இது….