இந்நேரம்தான் துவங்கியது ஏறுதழுவுதல்….
இப்பொழுது வரை சற்றாய் திமிறிக் கொண்டிருந்தாலும் பெருமளவு இயல்பாகவே இருந்தது செல்லக்கிளி…..
அதிலும் மஞ்சிகையின் வருகைக்குப் பின்….அவளது வார்த்தைக்கு அப்படியே கட்டுப்பட்டு அழகாய் அது….
ருயம்மாவிற்கு நானும் சாதுவான காளையும் அவரும்…..இதில் என்ன வீரமும் விளையாட்டும் இருக்க முடியும் என தற்போது தோன்றியது…..
இப்பொழுது பங்கேற்க இருக்கும் காளைகளை…..சிறு சிறு குழுக்களாக பிரித்து மைதானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அதற்கென ஆயத்தம் செய்திருந்த வாயிலில் காத்திருக்க செய்தனர்….
ஆனால் அப்படி காத்திருந்த வேளையில்….செல்லகிளியுடன் மூன்று வீரர்களும் மஞ்சிகையும் இருப்பதாகவும்…. இவள் இன்னொரு இடத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்லபட….. இவளுக்கான இடத்தில் வந்து நின்று கொண்டாள் ருயம்மா தேவி…. எதுவும் இவளுக்கான பாதுகாப்பு காரணமாய் இருக்கும் என நினைந்தாள் அவள்…
இங்கிருந்து பார்க்க செல்லக்கிளி முன்பை விட அதிகமாய் திமிறத் துவங்கியது தெரிய….இச் சூழலுக்கே அது இவ்வாறு நடந்து கொள்ளுமோ என இவள் எண்ணிக் கொண்டிருந்த வேளை….
காத்திருந்த வரிசைப்படி முதல் வாயில் காளைகளை அனுப்ப துவங்கினர்….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
அப்பொழுதுதான் அது எத்தகைய விளையாட்டு என்பது ருயம்மா தேவிக்கு புரிந்தது….. அதுவரையும் திமிறியெதல்லாம் ஒன்றுமில்லை என்ற வண்ணம்…..சீறும் சிங்கத்தையும் மதம் கொண்ட யானையையும் ஒத்த வண்ணம் ஓடி வர துவங்கியது காளை…. வேட்டைக்கு செல்பவனுக்கு கூட ஆயுதம் சுமந்து செல்ல அனுமதி உண்டே….இங்கு நிராயுதபாணியாய் அதை எதிர் கொண்டனர் இளைஞர்கள்….
காளையோடு சேர்ந்து ஓடுவதும்…..அதன் திமிலை பற்ற முயல்வதுமாய் அவர்கள் எனில்….
முதல் காளையே ஏற முயன்ற ஒருவனை ஒரு உதறலில் தூக்கி வீசியது என்றால்…. அது செல்லும் பாதையில் விழுந்ததாலோ என்னவோ…. அவன் சுதாரித்து எழும்பும் முன்னம் தன் கூரான கொம்பால் அவனை குத்தி குதறிவிட்டும் ஓடியது….
சிலையென ஸ்தம்பித்து நின்றிருந்தாள் ருயம்மா தேவி…. வீரமும் போர்களமும் அவளுக்கு பிரியம்தான்…. மரண பயமும் கிஞ்சித்தும் இல்லை….. ஆனால் இது ஏனோ தற்கொலை முயற்சி போன்றே அவளுக்கு தோன்றியது….
எவ்வாறாவது மானகவசர் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வகை இருக்கிறதா என தவிக்க துவங்கினாள் இவள்….
ருயம்மா தேவி நின்றிருந்த இடத்திலிருந்து காளை இருக்கும் இடத்திற்கோ அல்லது மானகவசர் காத்திருந்த பகுதிக்கோ செல்லவோ செய்தி அனுப்பவோ சற்றும் வகையற்ற ஜன நெரிசல் நிலையில்….. இவள் முயன்று தன்னவனை நோக்கி முன்னேற துவங்கினாள்….
இதில் ஒவ்வொரு வாயில் காளைகளாய் ஓட……இப்பொழுது செல்லகிளியின் வாயில்….
இன்னுமே மானகவசர் இருக்கும் பகுதிக்கு அருகில் கூட இவள் சென்றிருக்கவில்லை…….
செல்லக்கிளியோ இந்நேரம் கொம்புகளை கொண்டு மண்ணை கோரி கிளறுவதுமாய்… சீறுவதுமாய் அத்தனையாய் திமிறிக் கொண்டு புது அவதாரம் எடுத்திருந்தது அது.….. கயிறை நீக்கி அதை விடுவிக்கவும் தான் தாமதம்….உரு கொண்ட புயலாய் அது சீறிப் பாய….
இவள் கண் முன்னே மானகவசர் அதை எதிர் கொள்ள….. முன்பொரு நாள் போர்களத்தில் அவரது செயல்களை ரசிக்க சொன்ன மனது இப்போது தவிப்பிலும் சினத்திலுமாக மறுகவே சொல்கின்றது….
எதற்காய் இந்த ஆபத்தை வலிய இழுத்துக் கொள்கிறாராம் இவர்….?
அங்கு மானகவசரோ எதையும் சட்டை செய்யாமல் சீறி பாய்ந்து கொண்டிருந்த செல்லக்கிளிக்கு இணையாய் சற்று தூரம் ஓட…. அதற்குள் பாய்ந்து சென்று அதன் திமிலை பற்றினான் ஒருவன்….
மிரண்டு போனாள் இவள்….. இவன் செல்லக்கிளியை அடக்கிவிட்டால்…..ருயம்மா தேவி யாருக்கு மாலையிட வேண்டுமாம்??? சினம் சீறி ஏறிக் கொண்டு போகின்றது இவளுக்கு….இது என்னவிதமான விளையாட்டு….?இதை வைத்து மண முடிவா??!!!!
இப்போது அசுரதனமான ஒரு உதறலில் தன் மீதிருந்தவனை தூக்கி வீசிவிட்டு பாய்கின்றது செல்லக்கிளி……அந்த கணம் அதன் திமிலை பற்றினார் பாண்டிய பராக்கிரமன்….
ஒன்று…. இரண்டு…. மூன்று…….செல்லக்கிளியின் எத்தனை உதறலுக்கும் இவர் அதோடு உடும்பு போல் ஒட்டி இருக்க…..குறிப்பிட்ட எல்லையை கடக்கவும் வெகு இயல்பாக காளையிடமிருந்து விடுபட்டுக் கொண்டார் மானகவசன்…..
அவர் வதனத்தில் ஆர்பாட்டமற்ற வெற்றியின் களிப்பு…. சின்னஞ்சிறு புன்னகையாய் மாத்திரமே அது…..அங்கிருந்து அவர் இவளை நோக்க…..அக்கினியாய் தன் வதனம் காண்பித்தவள்….சரேலென திரும்பி நடக்கவும் துவங்கிவிட்டாள்…..