தனது மொபைலில் இருந்த மெசேஜ்ஜை சமீரின் தந்தையிடம் அந்த பெரியவர் காட்ட
தனது மொபைலில் இருந்த அதே தகவலை சமீரின் தந்தையும் காட்டினார்.
அந்தப் பெரியவர் மூடியிருந்த துணியை அகற்றவும் சமீரின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பெரியவர் மிக ஜாக்கிரதையாக அந்தக் கோவேரிக் கழுதை மீது வைத்து விழாமல் இருக்க மிருதுவான உறுதியான கயிறுகளைக் கொண்டு பிணைத்தார்.
சமீரின் தந்தை இன்னும் அதிர்ச்சியும் சந்தேகமும் அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் கொஞ்சம் தயக்கமும் வந்தது.
அந்தப் பெரியவர் ஒரு பெரிய கவரை சமீரின் தந்தையிடம் கொடுத்தார். அதில் இருந்த பணத்தைப் பார்த்ததும் சமீரின் தந்தையின் கண்களில் பேராசை தெரிந்தது.
“மிச்சம் வேலை முடிந்ததும் வந்து சேரும்” மலை கிராம மொழியில் அந்தப் பெரியவர் சொன்னதும் சமீரின் தந்தை வாங்கிக் கொண்டார்.
சமீரின் தந்தை சிறிது தூரம் அந்த ஒற்றைப் பாதையில் சென்று, பின் குறுக்கே அந்த மரங்கள் நடுவே புகுந்து செல்லவும் அந்தப் பெரியவர் தனது தோளில் மாட்டியிருந்த பையை எடுத்து அதில் இருந்த கருவியின் பட்டனைத் தட்டினார்.
“CAT DELIVERED”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதியின் "பார்த்தேன்... ரசித்தேன்..." - Some thing Some thing... உனக்கும் எனக்கும்...
படிக்க தவறாதீர்கள்..
நாள் 2 ; நேரம் 22:00 (GMT+5 ) சமேலி பள்ளதாக்கு மரவீடு
அன்று நிறைந்த பௌர்ணமி. பால் நிலாவின் பிரகாசமான ஒளி அந்த பள்ளத்தாக்கின் அடர்ந்த மரங்களிடையே ஊடுருவி மண்ணை ஒளிரச் செய்து கொண்டிருந்தது.
அன்று மாலையில் இருந்தே அந்தப் பள்ளத்தாக்கு மரவீட்டில் அந்த மூவரும் அதி தீவிரமாக யார்யாருடனோ பேசுவதும் அந்த கணினி திரையை இயக்குவதுமாக இருந்தனர். அங்கிருந்த மற்ற எல் ஈ டி திரைகளில் இப்போது உலகின் முக்கிய நகரங்களின் சாட்டிலைட் படங்கள் தெரிந்தன.
இரவு உணவை கொறித்துவிட்டு டீயை மட்டும் குடித்துக் கொண்டு அவர்கள் காரியத்தில் தீவிரமாக இறங்கிவிட விஜயகுமார் மனம் துடித்துக் கொண்டது.
அங்கிருந்தால் சரியாக யோசிக்க முடியாது என்று எண்ணி பாத்திரங்கள் கழுவி நீர் கொண்டு வர நதிக்கரைக்குச் சென்றார்.
சரியாக அதே சமயத்தில் சமீரின் தந்தை அங்கு வந்து சேர்ந்தார்.
தான் கொண்டு வந்து சேர்க்க வேண்டியதைப் பத்திரமாக அந்த மர வீட்டின் நாற்காலியில் வைத்தார்.
“இந்த நேரத்துல இப்போ எதுக்கு வந்த” அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மங்கோலியன் சமீரின் தந்தையை நோக்கி சீற இப்போது மற்ற இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுட்டு மூவரும் சமீரின் தந்தை அருகில் வந்து சேர்ந்தனர்.
“நீங்க தானே கொண்டு வந்து சேர்க்க சொன்னீங்க” சமீரின் தந்தை கூறவும் அந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியவே இல்ல” மூவரும் இப்போது சமீரின் தந்தையை சூழ்ந்து கொண்டிருந்தனர்.
சமீரின் தந்தை தனக்கு வந்த மெசேஜ் மற்றும் அந்த பெரியவர் வந்து கொடுத்து விட்டது எல்லாவற்றையும் கூறினார். அந்த மூவரும் அப்போதும் நம்பிக்கையில்லாமல் அவரை பார்க்க
தனது மொபைலில் இருந்த மெசேஜ்ஜை அவர்களிடம் அவர் காட்டிக் கொண்டிருந்தார்.
சரியாக அப்போது விஜயகுமார் கையில் பாத்திரங்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
கண்கள் பார்க்கும் பகுதியில் மட்டும் வலை போல மெல்லிய துணி இருக்க, முகம் உடல் முழுதும் மறைத்திருக்கும் படி கருப்பு நிற பர்தாவில் ஓர் உருவம் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவர் பார்த்த அதே நொடி அந்த பர்தாவில் இருந்த உருவத்தின் இமைகளும் மெல்ல விரிந்தன.
இரு பார்வைகளும் ஒன்றோடு ஒன்று பிணைய உயிர்கள் சிலிர்த்தன.
நாள் 2 ; நேரம் 22:30 (GMT+ 5.30) இந்திய எல்லைப் பகுதி முகாம்
யேசுதாஸ் மற்றும் மோகன் ராய் குழுவினர் அங்கே ஒரு டென்ட்டில் அதி நவீன கருவிகள் கணினிகளை இயக்கிக் கொண்டிருந்தனர்.
அவ்வப்போது யேசுதாஸ் கையில் இருந்த கருப்பு நிற பேசும் கருவியில் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
“CAT REACHED DESTINATION” என்ற தகவலோடு அதன் LATTITUDE LONGITITUDE விவரங்கள் வரவும் யேசுதாஸ் மேஜரிடம் அந்த தகவலைத் தெரிவித்தார்.
உடனடியாக மேஜர் வாசுதேவ் பள்ளதாக்கில் நகர்ந்து வியூகம் அமைத்திருந்த வீரர்களுக்கு அந்தத் தகவலை அனுப்பினார்.
“டேக் போஷிஷன்ஸ். வெயிட் பார் ஆர்டர்ஸ்” அவர் தகவல் அனுப்பவும் வீரர்கள் அதன் படி செயல்பட துவங்கினர்.