நாள் 2 ; நேரம் 23:௦0 (GMT+ 5.30) இந்திய எல்லைப் பகுதி முகாம்
மேஜர் வாசுதேவ் ஆபரேஷன் சக்சஸ் என்று சொன்னதும் மகிழ்ச்சி கொள்ளாமல் இன்னும் தீவிர சிந்தனையுடனே அமர்ந்திருந்தார் யேசுதாஸ்.
அவரது குழுவினரும் மோகன் ராயும் இன்னும் வேலை செய்து கொண்டே இருந்தனர்.
“சர் பிஎம் ஆன் லைன்” ஒரு அதிகாரி யேசுதாஸ்ஸிடம் ஹெட் போனைக் கொடுத்தார்.
பிரதமர் சொன்னதைக் கேட்டுக் கொண்ட யேசுதாஸ் தனது அதிகாரிகளுக்கு மேற்கொண்டு கட்டளை பிறப்பித்தார்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??
படிக்க தவறாதீர்கள்..
நாள் 2 ; நேரம் 23:00 (GMT+ 5) சமேலி பள்ளத்தாக்கு மரவீடு.
சமீரின் தந்தையை நோக்கிப் பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டினை குறுக்கே வந்து விழுந்து தன் மீது ஏற்றுக் கொண்டுவிட்டார் விஜயகுமார். அது அவரது இடது காலைத் துளைத்து விட்டது.
ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்ட கால் ஆதலால் விஜயகுமார் துவண்டு விழுந்தார்.
அதே நேரம் ராணுவ வீரர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட அந்த மூவரையும் கைது செய்தனர்.
“டாடி” பர்தா அணிந்த அந்த உருவம் தனது முகத்திரையை விலக்க அருகில் சித்தார்த்தும் வந்து அமர “பூக்குட்டி சித்து” என இருவர் முகத்தையும் தடவிக் கொடுத்தவர் மயங்கி சரிந்தார்.
உடனேயே யேசுதாஸ்க்கு தகவல் சொன்னான் சித்தார்த். அதன் படி அவர் மேஜர் வாசுதேவ்விடம் சில விவரங்கள் சொல்லவே மேஜர் தனது வீரர்களுக்கு தேவையான கட்டளைகளைப் பிறப்பித்தார்.
“சர். இங்கே ராணுவ விமானம் தரையிறங்க சமேலி கிராமம் தான் சரியான இடம். அண்ட் இட் கம்ஸ் அண்டர் அவர் கண்ட்ரோல். அதனால காப்ட்டனை அங்கே கொண்டு செல்ல வேண்டும்” ராணுவ வீரர் ஒருவர் சித்தார்த்திடம் வந்து சொல்லவும் சமீரின் தந்தை இப்போது மெல்ல பேசலானார்.
“என்னால தான் இவருக்கு அடிப்பட்டது. நான் கிராமம் செல்ல குறுக்கு வழி சொல்றேன். அங்கே என் வீடும் குடும்பமும் இருக்கு” அதிர்ச்சியில் இருந்து தெளிந்தவர் சொல்லவும் விஜயகுமாரை லேசாக மயக்கம் தெளிவித்து கோவேரிக் கழுதை மீது ஏற்றி அழைத்துச் சென்றனர்.
“நீயும் ஏறிக்கோ. மாமா விழுந்திடாம பிடிச்சுக்கோ” அபூர்வாவையும் ஏற்றி விட்டவன் சில ராணுவ வீரர்கள் துணை வர சமீரின் தந்தையோடு பயணித்தான்.
“அந்த தீவிரவாதிகளை விரைவில் நம்ம எல்லைக்கு கொண்டு போயிடனும். அதனால நாங்க தரை மார்க்கமாகவே போறோம்” மற்ற வீரர்கள் விடை பெற்றனர்.
“பூக்குட்டி” என்று அபூர்வாவின் கைகளைப் பிடித்துக் கொண்டவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அதிகமாக குருதி வெளியாகிவிட அவர் பலகீனமாக இருந்தார்.
“டாடி” வேறு எதுவும் பேசாமல் அவரது கரம் பற்றி அவர் நாடித்துடிப்பின் மேல் விரல் வைத்தபடியே இருந்தாள் அபூர்வா.
“பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே. அதனால இப்போ எதுவும் பேச வேணாம். அப்புறமா எல்லாம் சொல்றேன்” அபூர்வாவிடம் கூறினான் சித்தார்த்.
“இது கனவு இல்லை. நிஜம் தான்னு மட்டும் சொல்லு சித்து. அதுவே எனக்குப் போதும்”
தந்தையை அடையாளம் கண்டு கொண்ட நொடியில் உயிர் சிலிர்த்தவள் மனம் வெற்றிடம் போல் ஆனது. எந்த சிந்தனைகளும் எழவில்லை. கண்கள் கண்ணீர் சுரக்கவில்லை. மகிழ்ச்சி, ஆனந்தம், தவிப்பு, திகைப்பு போன்ற எவ்வித உணர்வுகளும் அவளை ஆட்கொள்ளவில்லை.
மனித உணர்வுகள் எல்லாம் புற மனம் (கான்சியஸ் மைன்ட்) சம்பந்தப்பட்டவை. தந்தையுடனான அவளது பந்தம் வெறும் தந்தை மகள் உறவு மட்டுமானது அல்லவே.
அது ஆன்மாவின், ஆழ்மனதின் பிணைப்பு அன்றோ. அவை உணர்ச்சிகள் அறியா. அவள் உயிர் சிலிர்த்தது மட்டுமே அதன் வெளிப்பாடு.
“எல்லாம் நிஜம் தான்” சித்தார்த் சொல்லவும் தந்தையின் முதுகின் மேல் இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டு அவரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் அபூர்வா.
நாள் 3 ; நேரம் 03:00 (GMT+ 5) சமேலி
அந்த பின்னிரவு நேரத்தில் ராணுவ வீரர்கள்,விஜயகுமார், சித்தார்த் அபூர்வாவுடன் வந்த சமீரின் தந்தை விஜயகுமாரை ஆட்டுக் கொட்டடியில் இருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க வைக்க சொல்லிவிட்டு வீட்டின் கதவை தட்டினார்.
“என்ன இந்நேரத்தில்” சமீரின் தாய் கதவைத் திறக்கவும் சமீரும் அன்னையுடன் வந்து எட்டிப் பார்த்தான்.
உடனேயே விஜயகுமார் அங்கே படுத்திருப்பதைப் பார்த்து துள்ளிக் கொண்டு வந்தான்.
“மாமா” மகிழ்ச்சியாக அவன் வந்து அவரை கட்டிக் கொள்ளவும் “சமீர்” என மெல்ல கண் திறந்து அவனைப் பார்த்து அழைத்தார்.
“மாமா பேசிட்டார். மா மாமா பேசிட்டார். பாபா மாமா பேசிட்டார்” அவர்கள் மொழி புரியாவிட்டாலும் அந்த சிறுவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்த அபூர்வா பூரித்துப் போனாள்.
“சித்து நீ முதன்முதல்ல என்ன பார்த்த போது பில்லின்னு சொல்லி எப்படி எக்சைட் ஆன அதே எக்சைட்மன்ட் ஐ சி இன் ஹிம்”
சித்தார்த் அந்தச் சிறுவனை பார்த்து புன்னகைத்தான்.