(Reading time: 35 - 70 minutes)

22. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

ANPE

ரு அடி தள்ளி நின்றாலும் இருப்பவர் இருக்கின்றார் என அறிய முடியா இருள் விலகா பொழுதில்தான் ருயம்மா இவ்வாறு நீராட வருவதெல்லாம்…. யார் தன்னை பின் தொடர்ந்தாலும்கூட கண்டுகொள்ள இயலாத வண்ணம் பிரத்யேகமாய் இதில் கவனமெடுத்திருந்தாள் இதுநாள் வரையுமே….

இருளின் மறைவுதான் இருக்கின்றதே என எண்ணாமல், பெண்மைக்கே உரிய  பாதுகாப்பு உணர்வின் நிமித்தம் நீராடும்  போதும் கூட முழு உடையிலேயேதான் நீராடுவாள்…. உடைமாற்றுவதோ சூழ இருள் இருந்தாலும் புதரின் மறைவுக்குள் உச்ச கவனத்தில்தான்….

ஆக மானகவசர் இந்நேரம் இங்கு எங்கு வந்தார்…? நான் நீராடும் நேரம் இவர் எப்படி வரலாம்….? என எந்த கேள்வியும் எழும்பாமல்…. அவள் மனதில் முதலில் உதித்த வினா இதுதான்….

“தாங்கள் என்னை எப்போது பெண் என புரிந்து கொண்டீர்..?” வினவினாள் அவள்…. ஆனால் மனகவசர் இதற்கு பதிலேதும் பகரும் முன்….வந்து விழுந்தது அடுத்த கேள்வி அவளிடமிருந்து…

“முதன் முதலாக என்னை கண்ட போதே பெண் என அறிந்து கொண்டீரோ?”

அவள் வினா எழுப்பிக் கொண்டிருக்க…. அருகில் வந்து நின்றால் முகம் தெரியுமளவு இருள் விலகிக் கொண்டிருக்கும் அந்நேர ஆகாயத்தையும் அதில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் சில மேக துகள்களையும் கண்ணுற்ற பாண்டிய வேந்தன், பின் நானா பக்கங்களிலும் தன் பார்வையை சுழற்றினான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஆங்காங்கு பட்சிகள் பறக்க துவங்கியது தவிர ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என்பதை மேலும் ஒரு முறை ஊர்ஜிதபடுத்திக் கொண்டவன் இலகு பாவத்துடனே விடை பகன்றான்….

”முதல் சந்திப்பில் நீ ஆண் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்ததென்றாலும் என்னுள் வேறு ஒரு ஐயமும் இருந்தது….வட தேசத்திலும்… பெர்ஷிய பிராந்தியங்களிலும் அரண்மனை அந்த புறங்களில் பணிவிடை செய்ய எனவும்,  பாதுகாப்பிற்கெனவும் பெண்களாய் பால்மாற்றம் செய்யப்பட்ட ஆண்கள் இருப்பார்கள் என கேள்வியுற்றிருக்கிறேன்…..காகதீயத்திலும் அவ்வாறு எதுவும் வழமை இருக்கிறதோ என்று தோன்றியது உனைக் காணவும்…”

ருயம்மாவுக்கோ இதைக் கேள்வியுறவும் “ஏது…என்னை என்னதாக நினைந்தீர்?” என கூவ வேண்டும் போல் அக்கணம் தோன்றினாலும்……

அவன் குறிப்பிடும் தேசங்களில் போரின் போது எதிரி தேசத்திலிருந்து பிடித்து வரும் ஆண்களை குறிப்பாக அரச குல ஆண்களை இவ்வாறு கட்டாயமாக மாற்றிவிடுவார்கள் என இவளும் கேள்வியுற்றிருப்பதாலும்.….

அதன் கொடூரம் இவள் மனதையுமே தைக்கும் என்பதாலும்….. ருயம்ம ருத்ரன் வேடத்தில் இருந்த இவளிடம் ஆரம்பம் முதலே மானகவசர் இரக்கம் என பாராட்டமல் நீ பிற மனிதர்களுக்கு முற்றிலும் சமானமானவன் என்ற வகையில் நடந்து கொண்ட பாங்கும்…..

பொறுப்புகளை குறிப்பிட்டு வாழ்வதற்கு காரணம் கற்பித்த நேர்த்தியும் இப்பொழுது இன்னுமொரு கோணத்திலும் இவளுக்கு புரிய…..தன்னவனை இன்னுமாய் சிலாகிக்கும் ஒரு மனோநிலையே வந்து பரவுவதால்  எதையும் சொல்லாமல் அமைதியாகவே அவன் வதனம் நோக்கினாள்.

“அதுவரை நான் காகதீய இளவரசியை ஒரு முறை கூட கண்டதில்லை….ஆக அப்பொழுது ருயம்ம ருத்ரன் நீயாக இருக்க கூடும் என சந்தேகம் தோன்றவில்லை….. அடுத்து உன்னை ஆலோசனைக் கூடத்தில்தான்  முதன் முதனாக கண்டேன்….அப்பொழுதும் உன் உருவமோ  அகல பருமனோ வதன வாகோ கூட காண முடியாதவாறு முகம் முதல் பாத விரல் நுனி வரை மறைத்தபடி வந்திருந்தாய்…..முழு இரவுப் பொழுது வேறு….  இருந்த விளக்கொளியில் ஒன்றையும் காண இயலவில்லைதான்…

ஆனால் எனக்குள் வேறு ஒரு எண்ணம்… காகதீயத்தில் இவ்வாறு முகம்  மறைக்கும் வழமை இல்லாத போது நீ ஏன் உன்னை இத்தனையாய் மறைத்திருக்கிறாய் என….?

ஆனால் அதைக் குறித்து அப்போதைக்கு நான் எம்முடிவுக்கும் வரவில்லை….

இதில் உனக்கும்  கோட்டைதலைவர் கூட அறியாமல் தங்கி இருக்கும் ருயம்ம ருத்ரனுக்கும் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கை அதிகம் என ஒரு புரிதல் இருந்ததால்…… அதான் அப்பொழுதே கூறினேனே….

ருயம்ம ருத்ரன் கோட்டை தலைவருக்கு கூட தெரியாமல் கோட்டையில் தங்கி இருக்க வேண்டும் எனில் கோட்டை தலைவருக்கும் மேலான அதிகாரத்தில் இருக்கும் உன் அனுமதி அதற்கு இருக்க வேண்டும் என்றாகிறது…..ஆக அவ்வாறு எண்ணினேன் என தெரிவித்தேனே….

அதோடு ருயம்ம ருத்ரனின் மனதில் பாண்டியம் மீதான பகைமை மறையாமல் இருப்பது அவரது  வார்த்தைகளில் அவ்வப் பொழுது தெளிவாகவே புரிந்தது…. ஆக நான் தனியாக துருக்கியரை உளவு பார்க்க செல்லும் செய்தியை எப்படியும் நீ ருயம்மரிடம் பகரும் போது….அவராக என்னை உளவு பார்க்க வருவார்…..அல்லது நீயாகவே அவரை அனுப்புவாய் என எதிர்பார்த்தேன்….”

பராக்கிரமன் விவரித்துச்  செல்ல “அது “ என சற்று சங்கடவாக்கில் இடையிட்டாள் ருயம்மா….

“தவறாக எதுவும் எண்ணமில்லை தேவி…. அரசியல் கோலேச்சும் யாவரும் கையள வேண்டிய கட்டாய முறைமை அது….நம்மை சார்ந்தவர் என்றாலுமே நாம் முழுவதுமாக நம்பி தேச பொறுப்பை கண்காணிப்பற்று அவரிடம் விட்டுவிட கூடாது…அவ்வாறிருக்க  அப்பொழுதுதான் நட்பு கரம் நீட்ட முயலும் தேசம் என்னது என்ற போது…. சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நீ எங்களுக்கு செயலாற்ற வாய்ப்பும்  கொடுத்து, எங்களை கண்காணிக்கவும் முயன்ற காரியம் மிக சிறப்பான முடிவே…” பாராட்டினான் பாண்டிய வேந்தன்…

ருயம்மா வதனத்தில் இன்னும் சங்கட நிவிர்த்தி முழுமையாய் நடை பெற்றிருக்கவில்லை எனினும் புன்னகையும் பூத்திருந்தது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.