பாண்டிய வீரனுக்கு வரிவிலக்கு கிடைக்குமென்பதற்காய் நீ உணவு உண்ட போதே பாண்டியத்தை நீ வெறுக்கவில்லை என புரிந்து கொள்வாய் என எதிராபார்த்தேன்…. உன் உணவுப் பழக்கம் சற்று திருப்திகரமாய் அதன் பின் மாறியதே தவிர….நீ விஷயத்தை புரிந்து கொண்டது போன்று தெரியவே இல்லை…
அதனால் தான் கரை இறங்கவும் மாறுவேடமிட்டு ஊர்காவலுக்கு அழைத்துப் போனேன்….. நானே மாறுவேடம் இடும் பொழுது…. நான் எவ்வாறு உன்னை தவறாக நினைப்பேன் என எண்ணிவிட மாட்டாயா? மாறுவேடமிடுதலும் ஒற்றறிதலும் மக்கள் நலன் காத்தலின் ஒரு அம்சமே என உணர்ந்து கொள்ளமாட்டாயா?
நீயே ஏன் இத்தனை பிராயத்தணம் செய்து பாண்டிய பயணம் மேற்கொண்டாய்? என் மீதுள்ள காதலினாலா ? இல்லையே…. நீ இவ்விவாஹத்தை வேண்டாம் என மறுப்பதால் உன் நாட்டு மக்களுக்கு எதிராய் இன்னுமொரு போர் வந்துவிடக் கூடாது என்ற நினைவிலும்….. மேலும் உன் தங்கைக்காகவும் பயணப்பட்டிருப்பாய்…. உனை சார்ந்த மக்களின் நலனுக்காக நீ மேற்கொண்ட ராஜிய பயணம்தானே இது…. அதை நான் பூரணமாகவே அங்கீகரிப்பேன் என உணர்ந்து கொள்ள மாட்டாயா என்ற நினைவில்தான் உன்னையும் ஊர்காவலுக்கு உடன் அழைத்துப் போனேன்….
ஏற்ற முறையில் மஞ்சிகை பொன்னிவச்சான் நிகழ்வும் அமைந்தது.... பெண் என்பவள் பெற்றோருக்கு தெரியாமல் வெளி வருவது பாவம் என்று குமைந்து கொண்டிருந்த நீயே…. பிறருக்காக என்று கூட இல்லாமல் காதல் நிமித்தம் வெளி வந்திருந்த மஞ்சிகைக்காக என்னையே எதிர்த்துப் போராடினாய்……
பாண்டியர்களை எதிரியாய் எண்ணாமல் நீ சக மனுஷராய்த்தான் பார்ப்பாய் என உனக்கு புரிவிக்கவும்…. வீட்டை விட்டு ரகசிய பயணம் வந்த காரியம் சூழ்நிலையின் நிமித்தம் தவறில்லை என்று உனக்கு உணர்த்தவும் அது போதுமானதாக இருந்திருக்கும் என நினைகின்றேன்….. ஆயினும் அதன் பின்பு உன் வதனத்தில் சற்று தெளிவு வந்து சேர்ந்தாலும்…. முழுமையாக உணர்ந்தது போன்றெல்லாம் இல்லை….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
விளையாட்டாய்த்தான் எனினும் தனியாய் இருக்கிறேன் என எண்ணிடமே சொன்னாய்….. இத்தனை கால ரகசிய பயணத்தில் மனம்விட்டு பேசக்கூட யாருமற்ற நிலையில் அந்நிய தேசத்தில் இத்தனிமை எத்தகையதாய் இருக்கும் என தோன்ற…..அதனால்தான் உனக்கென நான் இருக்கிறேன் என்பதாக என் காதலை உணர்த்த முயன்றேன்….
ஏறுதழுவல் அப்பழுக்கற்ற நம் காதலுக்காக மாத்திரமே செய்த செயல்…… மன்னராக நான் உனக்கு எத்தனையோ செய்து தர இயலும்….. ஆனால் நம் காதலுக்காக செய்ய எனக்கு இச் சூழலில் அமைந்த ஒரே விஷயம் அதுவே…. அதன் பின் என் மன ஓட்டம் உனக்கு தெரியுமே…
அப்பொழுது கூட நீ என்னிடம் உன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை….. உண்மை நிலவரம் என்ன என புரிந்து கொண்டால் மகிழ்வாக விவாஹத்தை எதிர் நோக்குவாய் என்பதே என் எதிர்பார்பு…..
ஆனால் எனக்காக கூட இல்லாமல் இறுதியில் தேவையில் நின்ற ஒரு பெண்ணிற்காய் நீ உன்னை வெளிப்படுத்திக் கொண்டதில் நம் காதல் பரிபூரணப்பட்டதாகவே எனக்கு படுகின்றது….” மானகவசன் விழிகளில் அளப்பரிய காதல் கசிந்துருக தன்னவளிடம் இதை தெரிவிக்க…
அது வரையிலும் வற்றாத ஆர்வமுடன்…. வழிந்துருகும் இனிமையுடனும் கேட்டிருந்த ருயம்மா தேவி..…
“பரிபூரணமா….? இன்னும் துவங்க கூட இல்லை…” என முனங்கினாள்…. குதித்தோடும் குறும்பையும் கூடவே வந்துதிக்கும் நாணத்தையும் வதனத்தில் தலைகாட்ட தடை போட முயன்றபடி அவன் விழிகளைக் காணவும் தவிர்த்தாள்.
“ஏது?” என்ற பராக்கிரமனின் குரலில் இப்பொழுது இலங்கி நின்றது முழு குறும்பே….
இதற்குள் நாணத்தை வெற்றிக் கண்டு…. இப்பொழுது உரிமையும் விளையாட்டுமாய் தன்னவனை நிமிர்ந்து நோக்கி இருந்த பராக்கிரமன் காதலியோ…..சற்றாய் நாசி சுருக்கி…. மிக மிக சீண்டலாய்
“என்னிடம் எந்த பாண்டிய பராக்கிரமரும் தன் காதலை சொல்லவும் இல்லையாம்…..நானும் அதை ஆமோதித்திருக்கவும் இல்லையாம்….இதில் பரிபூரணமாம்” என வம்பிழுத்தாள்…
பதிலுக்கு தானும் குறும்பாக எதையோ கூற தலைப்பட்ட பாண்டிய தலைமகன் பின் ஏனோ அதை நிறுத்திக் கொண்டவன்….
“காரணங்களை உற்று நோக்கி, என் தேடலின் முடிவாய் நீ இருப்பாய் என புரிந்து, நான் உன்னை விவாஹம் புரிய முடிவெடுத்த நேரத்தைக் காட்டிலும்…. உன்னை முக முகமாய் கண்டு காகதீய களங்களில் காதலில் விழுந்த கணங்களைப் பார்க்கிலும்…..
உன் மனதின் செயல் வடிவான உன் பாண்டிய பயணமும்….பயணத்தில் உனது ஆண் வேடமும், பாதுகாப்புணர்வும், சமோயோசிதமும், சக மக்கள் நலம் பேணும் மாசற்ற உன் தாய் குணமும், என்னை உன்னுள் வெகு வெகுவாக இழுத்து கரைக்க….
எனக்காக கூட செய்ய நினையாத ஒரு செயலை.. உன்னை வெளிப்படுத்துவதை… இளைப்பாறல் தேடும் ஒரு சிறு ஜீவனுக்காய்.. ஒரு தாய்க்காய்… நீ செய்த போது, உனை என் உதிரத்தின் உட்பொருளாய்…..சரீரத்தின் அங்க அவயங்களாய்…. என் பெண்ணிய உருவாய்….நீயே நானாய் உணர்ந்தேன்…. இத்தகையது என் காதல் தேவி…
இதை உன்னதாய் ஏற்று….. அதில் உனது நாயகனாய் எனது பெயரை எழுதுவாயா?” என வினவினான் மானகவசன்.
அவன் கண்மணிப் பார்வைகள் அவன் கண்மணிப் பாவையிடம் கலந்தே கிடக்க……குறும்பென்றோ விளையாட்டென்றோ எதுவுமின்றி உள்ள உணர்வை ஒளிவு மறைவின்றி சொல்லிவிட்டு…. உணர்வுகள் சங்கமிக்கும் ஓசையற்ற ஒலியை மாத்திரம் பின்புலமாய் கொண்டு…. கன்னியவள் பதிலுக்காய் காத்து நின்றான் பாண்டிய வேந்தன்.