அந்நிலையில்தான் ருயமருத்ரனாய் உன்னை அழைத்துக் கொண்டு உளவுப் பயணம்….. அடுத்து போர்களத்திற்கு இளவரசியாய் பெண்ணுடையில் நீ வந்தாய்….. முகம் மறைத்திருந்தாலும் பயணிக்கும் முறையிலிருந்து உயரம் அருகாமை பேச்சு வீதம் ….என எல்லாம் தெள்ளத்தெளிவாகவே ருயமருத்ரனும் ருயம்மாதேவியும் ஒரே நபர்தான் என எனக்கு காண்பித்துக் கொடுத்தன….
அப்பொழுதுதான் உனக்கு இவ்விவாஹத்தில் விருப்பம் இன்மை இருந்து…..இச் சூழலில் என்னை விரும்ப துவங்குகிறாய் என்பதையும் புரிந்து கொண்டேன்….”
“ஏது…? அப்போதேவா?” என இவள் கேட்டிருக்க வேண்டாம்…. வினா தொடுக்கவும்தான் அச் சூழலில் எத்தனையாய் இவள் மனம் அவன் பால் சரிந்தது என இவளுக்கு நினைவில் வருகிறதென்றால்….
“எத்தனை எத்தனை முறை என் மீதான காதலை உன் விழிகளில் நீ கசியவிட்டாய் அப்பொழுது” என மானகவசரும் அதையே உணர்ந்தாற் போல் சொல்ல…
காதலுறுவது என்பது வேறு….ஆனால் அதை தன் காதலன் வார்த்தைகளில் கேள்வியுறுவது என்பது வேறல்லவா……முன்னது ரகசிய சுகா உற்சவம் என்றால்….பின்னது வெளி நிலை அவஸ்தையின் ஆனந்த உச்சம்….
அதுவரையிலும் மானகவசனை நேர்கொண்டு பார்த்தவாறு சம்பாஷித்தவள் வெட்க வேள்வியில் கருகியபடி அவன் விழிகளை தவிர்த்து பின் ஒருவாறு சமாளித்து மீண்டுமாய் அவன் வதனம் நோக்க…
அவளை மேலுமாய் தடுமாற விட மனமற்றவனாய் அடுத்த விஷயத்திற்கு சென்றான் பாண்டிய வேந்தன்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
மறுதினம் நீ விருந்தில் கலந்து கொள்ளாதது சற்று ஏமாற்றமாய் இருந்தது என்றால்…. அடுத்த தினம் நான் காகதீயத்திலிருந்து பிரயாணபடும் நிலை இருந்ததால்….அதை அறிந்து உண்மையை உரைக்கும் நோக்கில் நீ இளவரசியாகவே என்னை நாடுவாய் என நம்பி இருந்தேன்….
ஆனால் நீ ருயம்மராகவே வந்தாய்….ஆண் குரலிலேயே சம்பாஷித்தாய்…..அதோடு என்னோடு பாண்டியம் வருவேன் என நான் சற்றும் எதிர்பாராத கோரிக்கை வைத்தாய்….
உண்மையில் நீ எதற்காக தற்கொலைக்கு முயன்றிருப்பாய் என்ற வினாவுக்கு எனக்கு விடை கிடைத்தது அப்பொழுதுதான்…..
என்னை மணக்க வெறுத்து தற்கொலை முயற்சி எனும் அந்த நினைவு கொடூரமாக எனை வதைத்தாலும்….. பாண்டிய மன்னனாக எனை கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத நீ….மானகவசனாக என்னை முழுவதுமாய் மனதில் ஏற்றிருக்கிறாய்…. என்னை மாத்திரம் நம்பி நீ அந்நிய தேசம் கூட வர தயாராய் இருக்கிறாய் என்பதை அப்போது புரிந்துணர்ந்தேன்…
சில விகார மனம் உடையோருக்கே வரலாறு கால பகை…. வேறு சாதியை சார்ந்தவன்…. பிற சமயத்தான் என்ற காரணங்களுக்காகவெல்லாம் நேரில் பார்க்கும் மனித உயிரை வெறுக்கவும் விலக்கவும் தோன்றும்…..ஆனால் உன்னைப் போன்ற இயல்பில் நேர்மையும் அன்பும் உடைய மனப்பாங்கு உள்ளோருக்கோ கண்ணெதிரே நிற்கும் மானுடன் மனிதனாக மாத்திரமே தெரிவான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்….
ஆக விவாஹத்திற்குப் பின் நீ பாண்டியம் வந்த காலத்தில் பாண்டியர்களை நேசிப்பதில் எக்குறைவும் இராது…உனக்கு பாண்டியம் முற்றிலுமே மனதிற்கினியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும்…….விவாஹத்தை தவிர்க்க தற்கொலை வரை முயன்ற உன்னை விவாஹத்திற்கு பின் பாண்டியம் அழைத்து வந்து புரிய வைத்துக் கொள்ளலாம் என நம்பி விட்டுவிட்டு வர இயலவில்லை…..
தவித்து நின்ற உன்னிடம் பாண்டிய தேசம் பற்றி பாண்டிய தேசத்தை சேர்ந்த நான் வெறும் வார்த்தைகளால் எத்தனைதான் தேற்றினாலும்….. கண்ணால் காணாத தேசத்தை நம்புவாய் என தோன்றவில்லை…. ஆதலால் நீ இங்கு வந்தே தெரிந்து கொள் என அழைத்து வர சம்மதித்தேன்…..” பராக்கிரமன் விவரித்துக் கொண்டு போக….
அவ்வாறு சம்மதித்த சமயத்தில் அவன் வார்த்த அவனது அந்த பார்வை……கனிவும் காருண்யமும் அக்கறையும் அரவணைப்பும் ஆறுதலும் அன்பும் ஒன்று சேர ஊற்றெடுத்த அப்பார்வை….. நியாபகம் வர அதன் காரணம் விளங்கியது இவளுக்கு இப்போது….
“பயணத்தில் என்னை நான் பாண்டிய வேந்தன் என வெளியிட்ட பின் நீ அதீதமாய் விலகினாய்…. முதல் ஓரிரு தினம் விஷயத்தின் அதிர்ச்சி என எண்ணி நான் மனம் தேற்றிக் கொண்டாலும்….உன் விலகல் அடுத்து வந்த தினங்களிலும் தொடர….
மனம் தவித்துப் போனேன்…. பராக்கிரமரும் நானே என உன்னிடம் உண்மையை வெளியிட்ட அன்று வரதுங்கன் பேசிய பின்பே நீ முகம் துவண்டாய் என்பதையும் கூட்டி நினைத்துப் பார்க்க….. உனது விலகலுக்கும் தவிப்புக்கும் காரணம் என்னதாய் இருக்கும் என ஓரளவு புரிய முடிந்தது…..
உன் ரகசியத்தை… நீ பாண்டியத்தை வெறுத்ததை நான் எவ்வாறு ஏற்பேன் என தவிக்கிறாய் என புரிய…. அடுத்து அவ்வாறெல்லாம் எண்ணி நீ உன்னை வருத்திக் கொள்ள வேண்டாம் என மறைமுகமாக உனக்கு உணர்த்திவிட முயன்றேன்…
நம் விவாஹத்தில் எனக்கு பெரும் விருப்பம் இருக்கின்றது……உன் விருப்பங்களை சார்ந்தே என் விருப்பும் அமையும் என கூறவே விவாஹ முறையில் உன் விருப்பம் என்ன என்பதாய் அன்று விசாரித்தேன்…. நீயோ பெற்றவர்கள் முடிவுதானே எல்லாம்….எனக்கென தனியாய் என்ன என்றுவிட்டாய்….
ஆக பெற்றவரை மீறி வெளி வந்துவிட்டோம்…மாறு வேடமிட்டோம் என எல்லாவற்றிற்கும் வருந்துகிறாய் என புரிந்தது…. உன் விலகலின் மொத்த காரணம் என்னதாய் இருக்கும் என நான் உணர்ந்து கொண்டதும் அப்போதே…
அதோடு உண்ணாமல் தேய்ந்தாய்….
ஆதலால் உன் அனைத்து குழப்பத்தையும் நீக்க நடவடிக்கைகளை துவங்கினேன்….