முதன் முதலில் தான் ஒற்றனாக நாகவனத்திற்குள் நுழைந்ததை நினைத்துப் பார்த்தான். திறமையாக பயிற்சி பெற்று யாருக்கும் சந்தேகம் வராமல் தத்ரூபமாக நடித்து நாகவன அரச ரகசியங்களை தெரிந்துகொண்டு தன் தாய்நாடான வீரபுரத்திற்கு தகவல்களை அனுப்பி வந்தான்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நாகவன வீரர்கள் அவனைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தான் வசமாக சிக்கிக்கொண்டோம் என்று எண்ணினான்.
நாகவனத்தில் இருந்து உயிரோடு தப்பிப்பது என்பது கடவுளே நினைத்தாலும் முடியாது. ஆனால், தன் நாட்டிற்கு மிகப்பெரும் ஆபத்து சூழ்ந்திருப்பதை எப்படி தெரியப்படுத்தப்போகிறோம்? தன் உயிர் போனாலும் பரவாயில்லை, ரகசியத்தை தாய் நாட்டிற்கு எப்படியாவது கொண்டு சேர்க்கவேண்டும் என்று உறுதி பூண்டான்.
வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிலும் பார்வையை சுழலவிட்ட அருள்நம்பி, கிழக்கு திசையை நோக்கி நடந்தான்.
காலை முதல் மாலை வரை வயல்களில் வேலை பார்த்த மக்கள் களைப்பைப் போக்க மரத்தடியிலும் வீட்டு வாசலில் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தனர்.
ஆங்காங்கே வீட்டின் வெளியில் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் மண் சாலைக்கு மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்தாலும் பூரண சந்திரனின் ஒளியால் அவனால் தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிந்தது.
அருள்நம்பிக்கு தெரியாமல் நாகவன வீரர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். திடீரென, நூற்றுக்கணக்கான குதிரை வீரர்கள் கையில் தீப்பந்தத்துடன் வீதியில் வேகமாய் வந்துகொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்டதும் ஒரு வீட்டின் பின்னால் ஒளிந்துகொண்டான் அருள் நம்பி. அவன் முகம் வியர்வையால் நிரம்பி இருந்தது. குதிரை வீரர்கள் சென்றதும் சிறிது நேரம் அமைதி காத்த அருள் நம்பி மீண்டும் மெல்ல நடந்தான்.
வீரர்கள் பின்தொடர்வதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ரகசியத்தை வீரபுரத்திற்கு தெரியப்படுத்தவேண்டும் என்றே குமுறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென இருளில் மறைந்தான் அருள்நம்பி.
அதைச் சற்றும் எதிர்பாராத நாகவன வீரர்கள் அருள்நம்பியைத் தேடினார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தூரத்தில் குதிரை ஓடும் சப்தம் மட்டும் அவர்களின் காதுகளில் கேட்டது.
தொடரும்...
{kunena_discuss:1135}