"ஷூட்டிங் நடக்கணும், அப்புறம் உன் இஷ்டம்" ஜெஸிகாவுக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாக சொன்னான் வசந்த்.
நீண்ட மூச்சை விட்டபடி ஜானிடமிருந்த காபியை வாங்கினாள் ஜெஸிகா.
"பார்த்து. சுட போகுது"
ஜானின் பணிவு கண்டு உள்ளுக்குள் 'கடவுளே' என ஜெஸிகா தன்னைத் தானே நொந்துகொண்டாள்.
குளிருக்கு காபி அமிர்தமாய் இருந்ததாலும் ஏனோ ஜெஸிகாவின் மனம் அதை ஏற்பதற்கு இல்லை. "வசந்த்" மெதுவாய் அழைத்தாள்.
"சொல்லு ஜெஸ்ஸி"
"ஜான் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லையே. நீ அவன் கிட்ட என்ன சொன்ன? ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லி தொலைச்சிருக்கியா?"
"என்ன ஜெஸ்ஸி நீயும் இப்படி கேக்குற? உன் வேலை போயிடும்னு சொன்னேன். அதனாலே சம்மதிச்சான்"
"நம்புற மாதிரி இல்லையே"
"எதிர்பாக்குறதை விட பணம் அதிகமா கிடைக்கும்னு சொன்னேன்"
"அப்போ இது தான் காரணம்"
"இருக்கலாம். ஆனா, அவன் உனக்காக தான் சம்மதிச்சான்"
"என்ன கருமமோ. ஆனா ஒண்ணு. அவன் காதல் கீதல்னு என்னை தொந்தரவு பண்ண கூடாது"
"சே சே உன்னை பிடிக்காம தானே இங்க வந்து தங்கியிருக்கான்"
"ம்"
"ஜானுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லு"
"எதுக்கு?"
"வீடு கொடுக்க சம்மதிச்சிருக்கானே"
"முடியாது. என் சார்பா நீயே சொல்லிடு"
"உனக்காக ரொம்பவே இறங்கி வந்திருக்கான். நீ ஒரு தேங்க்ஸ் சொன்னா குறைஞ்சா போயிடுவ?"
"ஏண்டா இப்படி என்னை சங்கடத்துல மாட்டி விடுற" என்று கையை பிசைந்தபடி நொந்துகொண்டாள். அவளது விழிகள் மெல்ல ஜானை நோக்கின.
"தேங்க்ஸ்"
ஜான். தன்னிடம் சொல்கிறாளா அல்லது தன் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என திரும்பிப் பார்த்தான்.
"உங்க கிட்ட தான் சொல்றேன். தேங்க்ஸ்"
'இவ்வளவு மரியாதையா என்னை கூப்பிடமாட்டாளே' என மீண்டும் தன் தலையை திருப்பி பார்த்தான் ஜான்.
"ஜான் உங்களை தான்"
"என்னையா இப்படி கூப்பிட்ட?" ஜானின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
"தேங்க்ஸ்"
"இருக்கட்டும் ஜெஸ்ஸி. வாழ்த்துகள்" என அவளிடம் கைகுலுக்க கையை நீட்டினான் ஜான்.
ஜெஸிகா வசந்த்தை நோக்கினாள். கைகுலுக்கும்படி கண்ணால் ஜாடை காட்டினான் வசந்த். வேண்டா வெறுப்போடு ஜானிடம் கைகுலுக்கினாள். அவளது முகம் கொள்ளிக்கட்டையை பிடித்தது போல் பாவனை செய்தது.
ஜான் ஜெஸிகாவின் கையை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தான். அவள் கையை விடுவிக்க முயன்றும் ஜான் விடுவதாய் இல்லை. பொறுமையிழந்த ஜெஸிகா தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுக்க, ஜான் பயந்து அவளது கையை விடுவித்தான்.
தன் வீட்டை நோக்கி காரில் விரைந்துகொண்டிருந்தான் வசந்த். தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக கூறிய ஜெஸிகாவை வழியில் இறக்கிவிட்டு நடந்தவற்றையெல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்.
நடப்பதெல்லாம் கனவாய் நகர்வது போல் அவனுக்குள் ஓர் எண்ணம். கனவில் மட்டுமே அற்புதங்கள் நடக்கும் என அவன் பலமுறை நினைத்திருக்கிறான். கனவினிலும் கற்பனையிலும் மிதந்தபடி சென்றான் வசந்த்.
திடீரென வளைவில் வந்த காரை பார்த்து திகைத்து பிரேக்கை அழுத்தினான். எதிரே வந்தவனும் பிரேக்கை அழுத்த சிறிய மோதலோடு இரு கார்களும் நின்றன. கோபத்தோடு காரில் இருந்து இறங்கினான் வசந்த்.
"முட்டாள் அறிவில்லாம கார் ஓட்டிட்டு வர"
"யாருக்குடா அறிவில்லை?" என எதிரில் காரில் வந்தவனும் கீழிறங்கி சண்டை பிடிக்க வந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்தபடி நின்றனர்.
"டார்லிங்! சண்டையெல்லாம் வேண்டாம். ப்ளீஸ்!" என கூறியபடி பெண்ணொருத்தி இறங்கி வந்தாள்.