அந்த மாலில் அந்த குழந்தையை பற்றி அறிவிக்க செய்து, அதை பெற்றவர்களிடம் அவன் ஒப்படைக்க தாவி சென்று கட்டிக்கொண்டது அதன் தந்தையை.
‘எனக்கு எங்க அப்பாகிட்டே போகணும்..’ அவர்கள் வருவதற்குள் இருநூறு முறை சொல்லி இருக்குமா அந்த வார்த்தைகளை. அப்பாவின் தோள்களில் தொங்கிக்கொண்டு கண்ணீருடன் இவனை பார்த்து அந்த குழந்தை சிந்திய அந்த புன்னகை அவனுக்கு ஏதேதோ செய்திகளை சொல்லின.
‘நானும் எங்க அப்பாகிட்டேதான் இருக்கணும் சொல்லிக்கொண்டான் அவன்.
அவன் அந்த மாலை விட்டு வெளியே வர அதன் அருகே இருந்த அந்த ஹோடேலுக்குள் நுழைந்துக்கொண்டிருந்தாள் ஹரிணி. ஏதேதோ யோசனைகளுடன் சில நொடிகள் அவள் சென்ற திசையையே பார்த்திருந்தான் விவேக்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தான் விவேக்.
அங்கே டிவியில் அந்த தமிழ் செய்தி சேனலில் அந்த விவாதம். ஹரிணியின் விமானம் பற்றிய விவாதம். அவரவருக்கு தெரிந்த விதத்தில் கிழித்துக்கொண்டிருந்தனர் அந்த இரண்டு விமானிகளையும்.
அப்பாவின் முகத்தில் நிறையவே கலவர ரேகைகள். ‘அய்யோ என் மகளை எல்லாரும் என்ன செய்கிறார்களோ. எப்படி இருக்கிறாளோ???
‘அப்பா..’ அவர் அருகில் அமர்ந்தான் ‘ஹரிணிகிட்டே பேசணுமா உங்களுக்கு..’
‘ஆங்...’ சற்றே திகைப்புடன் நிமிர்ந்தார்.
‘உங்க பொண்ணுகிட்டே பேசணும்மானு கேட்டேன். என் நம்பர் பார்த்தா எடுக்க மாட்டா. நீங்க வேணும்னா லேண்ட் லைன்லேர்ந்து பேசுங்க. இந்த நம்பர் தெரியாது அவளுக்கு
‘நிஜமா பேசவா..’
‘அட பேசுங்க..’ அவன் கார்ட்லெஸ்சை எடுத்து அவரிடம் தர
என்ன தோன்றியதோ ‘வே.. வேண்டாம்.. அவ உனக்கு தப்பு பண்ணி இருக்கா.. வேண்டாம்... நான்.. நான் பேசலை..’ சொல்லிவிட்டு அவர் எழுந்து மெல்ல நடந்து செல்வதை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனுக்கு.
உடலில் ஆங்காங்கே கட்டுக்கள். வலி, வேதனை அதனோடு மகள்கள் மீது தீராத பாசம்!!!’ அவனது மனம் மெதுவாய் ஒரு முடிவுக்கு வந்தது.
அன்று இரவு
ஊர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டிருக்க எங்கோ சென்று திரும்பிக்கொண்டிருந்தாள் ஹரிணி. பழைய ஹரிணி இல்லை அவள். நடையிலேயே நிறைய தளர்ச்சி வந்திருந்தது.
இதுவரை துணையாய் இருந்த எந்த நண்பர்களும் இவளோடு இப்போது பேசுவதில்லை. இவளாக அழைத்தாலும் இரண்டு நிமடங்களில் பேச்சை முடித்துக்கொள்கிறார்கள். இல்லை என்றால் அவள் செய்த தப்பையே சுற்றி சுற்றி வருகிறார்கள்..இப்போதுதான் வாழ்க்கை மெல்ல மெல்ல புரிகிறது’
‘இரண்டு நாட்களில் மறுபடியும் விசாரணைக்கு அழைப்பார்கள் செல்ல வேண்டும்.’ ஏதேதோ யோசனைகளுடன் அவள் நடந்துக்கொண்டிருக்க
‘ஹரிணி..’ அழைத்தது அந்த குரல்.
இருட்டில் துழாவிய அவளது விழிகளுக்கு தட்டுப்பட்டது விவேக்கின் முகம். காரில் சாய்ந்துக்கொண்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விவேக். அவனது கூர்மையான பார்வை அவளை ஊடுருவியது. ஆனால் அதில் எந்த விதமான வெறுப்போ, கோபமோ இல்லை. எல்லாவற்றையும் கடந்து விட்டவன் போல் நின்றிருந்தான் அவன்
சடக்கென அவனருகில் வந்து நின்றாள் அவள். ஆனால் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் நிச்சயமாக இல்லை அவளிடத்தில்.
‘கார்லே ஏறு. உங்க அப்பா எங்க வீட்டிலேதான் இருக்கார்’
‘எங்க அப்பாவா?? அவர்.......’
‘அவருக்கு ஒண்ணுமில்லை. நல்லாதான் இருக்கார். உன்னை பார்க்கணும்னு தவிக்கிறார் வா..’ அதற்கு மேல் அவள் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி காரில் ஏறி அமர்ந்துக்கொண்டான் அவன்.
சில நொடிகள் யோசனையுடன் நின்றவள் பின்னர் காரில் ஏறி அவனருகில் வந்து அமர்ந்துக்கொண்டாள்.. அவளது மனசாட்சி அவள் உயிர் கிழித்தது.
கார் நகர்ந்துக்கொண்டிருக்க
‘விவேக்...’ என்றாள் அவன் பக்கம் திரும்பி ‘நான் நிறைய தப்பு..’
‘ப்ளீஸ் ஹரிணி ... இந்த சாரி. மன்னிச்சிடு இதெல்லாம் அர்த்தமில்லாத வார்த்தைகள். இதை சொல்றவனுக்கும் பிரயோஜனம் இல்லை கேட்குறவனுக்கும் யூஸ் இல்லை. தயவு செய்து இதெல்லாம் சொல்லாதே. முடிஞ்சா இனிமே யாருக்கும் எந்த தப்பும் செய்யாம நடதுக்கோ அவ்வளவுதான். இதுக்கு மேலே உன்கிட்டே பேச எதுவும் இல்லை..’
பேச வார்த்தைகளே எழாமல் கூனி குறுகிப்போய் அமர்ந்திருந்தாள் ஹரிணி அவனது கூர் பார்வை சாலையில் பதிந்திருக்க சீறி பறந்துக்கொண்டிருந்தது கார்.
வீட்டை அடைந்திருந்தனர் சில நிமிடங்களில்.