என்ன புரிந்து என்ன பிரயோஜனம்… அவள் தன் மனதினை புரிந்து கொள்ள முயற்சிக்க எடுத்துக்கொண்ட கால அவகாசம் அவன் மனதில் வேறு விதமான சிந்தனையை கொடுத்தது...
அவளுக்கு தன்னுடன் பேச விருப்பமில்லை போல… என எண்ணியவன் முடிந்த மட்டும் கொஞ்சம் ஒதுங்கி போக ஆரம்பித்தான்… ஆனால் அது அவனுக்கு அவ்வளவு எளிதாக இல்லை….
அந்த சமயத்தில், அவளே ஒப்புக்கொண்டாள், தான் வேண்டுமென்று தான் ஒரு மாத காலம் பேசவில்லை என…
அதைக் கேட்டு “ம்ம்……” என்றவன் அதற்கும் மேல் அதனைப் பற்றி தோண்டி துருவவில்லை..
நாளைக்கு அவளுக்கு கல்யாணம் என்றால், தான் ஒரு அடி தள்ளி தானே நிற்க வேண்டும்… என்ன தான் நண்பனாக இருந்தாலும் கணவன் தானே அவளுக்கு எல்லாம்… என அவன் மனம் சிந்திக்க ஆரம்பிக்க, அதற்காகத்தான் அவளும் தன்னை விட்டு இந்த ஒருமாத காலம் பிரிந்திருந்தாள் போலும் என நினைத்துக்கொண்டான் அவனும்…
“என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியாது கார்த்தி… ஒருமாசம் பேசாம இருந்ததுக்கு என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்…” என அவள் தன் காதலை மறைமுகமாக எடுத்துரைக்க, அவனுக்கு அவள் விலக முயற்சிக்கிறாளோ என தோன்றியது…
அப்படியே நாள் போய்க்கொண்டிருந்த நேரத்தில், அந்த மாத இறுதியில், அவள் தன் காதலை அவனிடத்தில் வெளிப்படுத்தினாள்…
“என்ன கார்த்தி பண்ணுறீங்க?...”
“டீவி பார்க்குறேன்… நீ?..”
“லேட் நைட் ஆகுது… இன்னும் டீவியா?...”
“பச்… தூக்கம் வரலை… அதான்…”
“ஓ… சரி…”
“ம்… நீ தூங்கலை?...”
“இல்ல தூக்கம் வரலை…”
“ஏன்?...”
“வந்து……”
“ம்ம்… என்ன வந்துன்னு இழுக்குற?...”
“உங்ககிட்ட ஒருவிஷயம் சொல்லணும்… ஆனா கேட்டுட்டு திட்டக்கூடாது… தப்பா எடுத்துக்கக்கூடாது…”
“நீ முதல்ல சொல்லு என்னன்னு…”
“கார்த்தி… நான்….”
“நீ?... என்ன… சொல்லு…”
“இல்ல கார்த்தி… பயமா இருக்கு…”
“என்னடா பயம்?... நான் உன் ஃப்ரெண்டுடா… எங்கிட்ட என்ன பயம்?...”
பயத்தில் இருந்தவள் அவன் “டா” என நெடுநாள் கழித்து அழைத்ததும் மகிழ்ந்தாள்…
“நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டீங்கல்ல?..”
“எதுக்கு இவ்வளவு தயங்குற நீ?...”
“இல்ல நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு யோசிக்குறேன்… அதான்…”
“நீ விஷயத்தை சொன்னா தான தெரியும்…”
“ம்… சரிதான்… ஆனா சொல்லணும்னு தான் ரொம்ப நாளா நினைக்குறேன்… ஆனா முடியலையே…”
“லூசு… என்ன ஆச்சு உனக்கு?... எதுக்கு இப்படி உளருற?...”
“தெரியலையே லூசாதான் ஆகிட்டேன் போல…”
“அடி வாங்கப்போற நீ இப்போ…”
“ம்ம்…”
“என்னன்னு சொல்லுடா… என்ன ஆச்சு?... எதுக்கு இவ்வளவு யோசிக்குற?.. அதும் எங்கிட்ட சொல்ல எதுக்கு இத்தனை தயக்கம் எல்லாம்?... என்னாச்சுடா?...”
அவனது சொற்கள் அவளுக்கு நம்பிக்கையும் தெம்பும் கொடுக்க, கண்மூடி கடவுளை மனதினில் பிரார்த்தித்துவிட்டு அவனிடம் தன் மனதினை வெளிப்படுத்தினாள்…
“உங்ககூட வாழணும்னு ஆசையா இருக்கு கார்த்தி… வாழ்க்கை முழுதும் உங்க கூட வாழணும் நான்… என்னை ஏத்துப்பீங்களா?... உங்க மனைவியா?...”
சொல்லிவிட்டு படபடக்கும் இதயத்துடன் அவனின் பதிலுக்கு காத்திருந்தாள் அவள்…
அவள் சொல்லிவிட்ட வார்த்தைகளில் சட்டென்று என்ன இது என நினைத்துக்கொண்டான் அவன்… அந்த அதிர்ச்சி அவனது வார்த்தைகளிலும் தெறித்தது…
“ஜானவி… நீ என்ன சொல்லுற?..”
அதுநாள் வரை சொல்லாமல் இருந்த அவளது பெயரை அவன் அன்று உச்சரிக்க அவளுக்கு சுர்ர்ர்ர் என்றது…