(Reading time: 31 - 61 minutes)

ரவில் அவனது அறைக்குள் முதல் முதலாக நுழைய, அவளுக்குள் சிறு பயம்… அவன் அவளது பயம் புரிந்து இதமாக பேச, அவள் தெளிந்தாள்… அதன் பின் இருவரும் பேசி சிரிக்க நேரம் போனதே தெரியவில்லை…

அவன் அவளுக்கு ஒரு தோழன் போல ஆகினான்… வாழ்வும் திகட்டாத தேனாய் இருந்தது… புடவை அணிந்து அவள் சிரமப்பட வேண்டாம் என சுடிதாரே அணிந்து கொள் என்றான்… பாரு முடி எல்லாம் பறந்து கண்ணுக்குள்ள விழுகுது கிளிப் போட்டுக்கோ அன அக்கறையாக பேச அவள் உருகி போனாள்…

வாரம் தவறாமல் வெளியே அழைத்து போவான்… அவளுடன் நேரத்தை பெரிதும் கழிப்பான்… அவள் சமைக்கையில் அவளுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அவளுடன் கொஞ்சி கெஞ்சி அந்த நாளை இனிதாக்குவான்…

அவர்களின் வாழ்க்கையை மேலும் இனிதாக்க கடவுள் எண்ணிய வேளை, அவள் கர்ப்பமானாள்…

“சரயூ… சீக்கிரம் வா… நான் கிளம்பிட்டேன்…”

“இதோ ஒரு நிமிஷம்ங்க… பால் மட்டும் எடுத்துட்டு வந்துடுறேன்… நில்லுங்க…”

“லேட் ஆகுதுடி… கடைக்கு சீக்கிரம் போகணும்….”

“இருங்க திலீப்… ப்ளீஸ்….” என வேக வேகமாக கிளாசில் பாலை ஊற்றி எடுத்துக்கொண்டு வந்தவள்,

ஹாலுக்கு வரவும் அப்படியே தலை சுற்றி பாலை கீழே கொட்டினாள்… அதோடு பால் இருந்த கண்ணாடி தம்ளரும் தரையில் பட்டு உடைந்து சிதற, சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த திலீப், அவள் தள்ளாடிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவளருகில் விரைந்தான்…

உடைந்த துண்டுகள் மேலேயே விழப்போனவளை சட்டென பிடித்து நிறுத்தினான் அவன்…

“சரயூ… இங்க பாரு… என்னாச்சுடி?...” என அவள் கன்னம் தட்டி எழுப்ப, அவள் கண்களை சொருகி கொண்டு கிடந்தாள்…

“ஹேய்… சரயூ… என்னாச்சுடி?...” என பதறியவன், அவளை தூக்கி கொண்டு பெட்ரூமை அடைந்தான்…

தண்ணீர் வைத்து முகத்தில் அடித்து எழுப்ப, அவள் கொஞ்சம் தெளிந்தாள்…

“இங்க பாரு சரயூ… பாரு…” என அவன் அவளின் கன்னம் பிடித்து பேச, அவள் முழுவதும் தெளிந்தாள்…

சகஜ நிலைமைக்கு வந்தவளின் முகத்தில் இருந்த பொலிவைக்கண்டு வியந்து போனான் அவன்…

“திடீர்னு என்னாச்சுடி உனக்கு?... பயந்தே போயிட்டேன்… தெரியுமா?...”

“ஒன்னும் ஆகலைங்க…” என்றவளுக்கு முகத்தில் பலமடங்கு புன்னகை வந்திருந்தது…

“ஒன்னும் ஆகலைன்னு சிரிக்குற நீ?.. இங்க பயந்து போன எனக்குத்தான் தெரியும்…” என அவன் கோபித்துக்கொள்ள,

“அதான் ஒன்னுமில்லன்னு சொல்லுறேன்ல திலீப்…” என சமாதானப்படுத்தினாள் அவள்…

“போடி… ஒன்னுமில்லாததுக்கா அப்படி கீழே விழப்போவ?.. சரி.. விடு… எழுந்திரு… நாம டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்…”

“டாக்டர் கிட்ட எல்லாம் போகவேண்டாங்க… ப்ளீஸ்…”

“எதுக்கு போக வேண்டாம்… உன் உடம்புக்கு என்ன ஏதுன்னு பார்க்க வேண்டாமா?..”

“பார்க்க வேண்டாம் எனக்கே தெரியும்….”

“என்ன?... தெரியுமா?... என்ன தெரியும்?...” என புரியாமல் கேட்டவனிடத்தில், என்ன சொல்ல எப்படி சொல்ல என்று தெரியாமல் போக, தலை குனிந்து கொண்டாள் அவள்…

“ஹேய்… என்னாச்சுடி?...” என அவளின் முகம் நிமிர்த்தியவனுக்கு அவளது வெட்கமும், பூரிப்பும், பொலிவும், அவனை ஈர்க்க,

“ஏண்டி என்னை இப்படி படுத்துற?...” என்றபடி அவளை இழுத்து அணைத்து இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்…

சிறிது நேரம் கழித்து அவனிடமிருந்து விலகியவள், அவனின் முகம் பார்த்து,

“இனி எங்கிட்ட இப்படி எல்லாம் நீங்க செல்லம் கொஞ்ச முடியாது….” என்றதும், அவன் விழித்தான்…

“ஏன்?????????...” என அதிர்ச்சியான குரலில் அவன் கேட்க

“அய்யோ… திலீப்… இன்னும் புரியலையா?...” என அவள் சிரிக்க அவன் “நிஜமா தெரியலைடி….” என்றான்…

“நீங்க… நீங்க… அப்பாவாகப் போறீங்க…..” என சொல்லிவிட்டு முகம் மூடிக்கொண்டவளை இறுக அணைத்துக்கொண்டான் திலீப்…

“சரயூ………………….” என்றபடி வேட்கையுடன் அவள் கரம் விலக்கி முகமெங்கும் முத்தமிட்டான் அவன்….

“போதும்… விடுங்க…” என சிணுங்கிக்கொண்டே விலகியவளை விலக விடாது தன் அணைப்பினிலேயே வைத்துக்கொண்டவன் அவளிடத்தில் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் செயலால்…

அதன் பின் அவளை பூ போல பார்த்துக்கொண்டவன், அவளை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு அனுப்ப கூட தயங்கினான்… அவள்தான் கெஞ்சி கொஞ்சி அவனை சமாதானப்படுத்தினாள்… ஆனாலும் கடைசியில் அவனது பிடிவாதமே ஜெயித்தது… வாசந்தி வந்து மகளை பார்த்துக்கொண்டார்…

பிரசவத்திற்கு கொடுத்திருந்த தேதியில் அவளுக்கு வலி வந்துவிட, திலீப் அவளுடனே இருந்தான்… வலியில் துடித்தவளின் தலை கோதி, கைபிடித்துக்கொண்டிருந்தவன் அவளை உள்ளே அழைத்து செல்லும் போது உயிரே தன்னை விட்டு போவது போல் உணர்ந்தான்…

சிசேரியன் மூலம் அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று மருத்துவர் வந்து சொன்னதும், உடனேயே மனைவியை பார்ப்பதற்கு உள்ளே சென்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.