தோழியா! என் காதலியா!
“ஏன் இப்படி என் உயிரை எடுக்குற? செத்து போயிடு! என்னால உன் இம்சையை தாங்க முடியலை!”
அதுவரை குனிந்திருந்த பாரதி முகத்தை நிமிர்த்தி பார்த்தாள். கண்கள் கலங்கி இருந்தது... அது விக்ரமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவசரமாக மனைவி வைத்திருந்த மதிய உணவை எடுத்துக் கொண்டவன், கொஞ்சம் திகைப்பும் அதிர்ச்சியுமாக நின்றிருந்த குழந்தைகளையும், அவனுடைய அம்மாவையும் கண்டுக்கொள்ளாது நடந்து, காரை கிளப்பி கிளம்பினான்.
அன்று நடக்க வேண்டிய முக்கிய வேலை பற்றி எண்ணியபடியே அவன் மாடியில் இருந்து இறங்கி வந்தால், பள்ளிக்கு செல்ல தயாராகி நின்றிருந்த இரண்டு குழந்தைகளும் ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அவன் மனைவி பாரதியும், அம்மா கல்பனாவும் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எதை பற்றிய விவாதம் என்று அவனுக்கு தெரியாது, யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்றும் அவனுக்கு தெரியாது ஆனால் அவனின் எண்ண ஓட்டம் தடை படவும் எப்போதும் போல் மனைவியிடம் எரிந்து விழுந்தான்.
அலுவலகத்தை அடைந்தவனுக்கு வேலையை தவிர வேறு எதுவுமே மனதில் தோன்றவில்லை. இது அவனுக்கே சொந்தமான நிறுவனம். அவன் அதை நிறுவி ஒரு வருடம் ஆக போகிறது. அவனுடைய உழைப்புக்கேற்ற வருமானம் வர தொடங்கி இருந்தது... ஆனாலும் அவன் இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை எடுத்து செய்துக் கொண்டிருந்தான்.
அந்த பெரிய கட்டிட வளாகத்தில் மாடியில் வணிக வளாகம் இருந்தது... கீழே அவனுடைய அலுவலகம் போல் வேறு சில அலுவலகங்கள் இருந்தன.
மதியம் அவனின் நண்பன் கோபால் வந்து உணவு உண்ண அழைக்கும் வரை முழு ஈடுபாடுடன் வேலை செய்துக் கொண்டிருந்தவன், பசி வயிற்றை கிள்ளுவதை உணர்ந்து நண்பனுடன் சென்றான்.
அங்கே இருக்கும் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் அமர்ந்து உண்ண தனியே கேண்டீன் இருந்தது. கோபால் ஒரு ஆடிட்டர். கடந்த சில வருடங்களாகவே அங்கே அலுவலகம்