ஆனால்,
“ஹலோ, என்ன விஷயம் விக்ரம்” என்று கல்பனாவின் குரல் கேட்டது.
“என்னம்மா நீங்க ஃபோன் எடுக்குறீங்க? பாரதி எங்கே?”
“அறிவிருக்காடா உனக்கு? பாவம் அவள்... காலாங்கத்தால அப்படி எரிஞ்சு விழுற? அதனால தானோ என்னவோ போனை மறந்து வச்சுட்டு போயிட்டாள்...”
“ம்ம்ம்...”
“உன் தங்கை கூட என்னை இப்படி கவனிச்சுப்பாளா தெரியலை, என்னை ஒரு வேலை செய்ய விடாமல் எல்லாத்தையும் இழுத்து போட்டுட்டு செய்துட்டு, வேலைக்கும் போறா, நீ ஏன்டா இப்படி இருக்க?”
“ப்ச்... சரிம்மா நான் அப்புறம் பேசுறேன்.”
கல்பனாவின் மனதில் பாரதி உயர்ந்து இருப்பது அவனுக்கு தெரியும்... திருமணத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளை பாரதி என்றுமே மனதில் வைத்துக் கொண்டதில்லை... இந்த எட்டு ஆண்டுகளில் நல்ல மருமகள் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவனின் தந்தை இறந்த போதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்பனாவிற்கு அறுவை சிகிச்சை செய்த போதும், மகளாய் இருந்து கவனித்துக் கொண்டாள்...
ஆனால் அவனை பற்றி பாரதியின் பெற்றோர் மனதில் உயர்ந்த அபிப்ராயம் தோன்றி இருக்குமா தெரியவில்லை... அவனின் நண்பர்கள் மதியம் சொன்னதுப் போல், ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற வீட்டு கிரஹபிரவேசத்தில் அவளுடைய உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் முன் அவளிடம் கோபமாக சொன்னது நினைவில் இருந்தது...
“ப்ச்... அவளிடம் நிறைய பேச வேண்டும்...”
🌼🌸❀✿🌷