எத்தனை சொல்லியும் இருவரும் மாறாததால் வேறு வழி இல்லாது இரு வீட்டினரும் அரைமனதுடன் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் அளித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
பாரதியும், விக்ரமும், அவர்கள் எடுத்த முடிவிற்கு வருத்தப் படுமாறு நேரவில்லை. இருவரும் மற்றவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். வேலையை விட்டுவிட்டு அவனுக்கு சிறப்பான மனைவியாக இருந்தாள் பாரதி. இரண்டு முத்தான குழந்தைகளும் இருந்தனர்.
குழந்தைகள் வளரும் முன் அவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆர்வம் விக்ரமிற்கு இருந்தது. அதனால் தான் சொந்த தொழில் துவங்கினான். பாரதி கணவனின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லவில்லை. ஆனால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராதிருக்க மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கினாள். பொருளாதரா ரீதியாகவும், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் மனைவி ஏற்றுக் கொண்டதால், விக்ரம் முழு மூச்சுடன் தொழிலில் ஈடுபட்டான்... ஆனால் கூடவே டென்ஷன், வேலை ப்ரெஷர், ஸ்ட்ரெஸ்ஸும் அவனை வந்து சேர்ந்தது...
கோபம் வரும் போதெல்லாம் அவனின் குழந்தைகளிடமோ, அன்பு செலுத்தி வளர்த்த அம்மாவிடமோ காட்ட அவனுக்கு மனம் வந்ததில்லை... எனவே எப்போதும் அவனின் கோபத்திற்கு வடிகாலாய் இருந்தது அவனின் மனைவி தான். பொதுவாக இது போன்ற சம்பவங்கள் தன்னை பாதித்ததாக பாரதி காட்டிக் கொண்டது இல்லை... எப்போதும் இயல்பாகவே நடந்துக் கொள்வாள்.
விக்ரமும் தனியாக மனைவியிடம் மன்னிப்பு கேட்டதில்லை... ஆனால் அவனின் பேச்சு நினைவு வந்து அவனையே வருத்தும் போது, மறக்காது மனைவிக்காக ஸ்பெஷலாக அதே வணிக வளாகத்தில் இருந்த அந்த புகழ் பெற்ற ஜவுளி கடையில் இருந்து விலை உயர்ந்த சேலை வாங்கி செல்வான். பாரதி இதற்காக கோபப் பட்டதும் இல்லை, தனியாக மகிழ்ந்ததும் இல்லை...
மீண்டும் மனைவியின் எண்ணை செல்போனில் தட்டினான். மீண்டும் அது அடித்து விட்டு