இரவில் அவன் வீடு திரும்பிய போது எப்போது போல் ஒரே சத்தமாக இருந்தது. மாமியாருக்கும் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி கொண்டிருந்தாள் பாரதி. அவனை பாரத்த உடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியானார்கள் நால்வரும். எதுவும் சொல்லாது அவன் மாடி பக்கம் செல்லவும் மீண்டும் சத்தம் வெளி வர ஆரம்பித்தது...
“பாரதி...” மாடியில் இருந்து விக்ரமின் குரல் கேட்டது.
பாரதி ஆச்சர்யமாக குரல் வந்த திசையை பார்த்தாள். கல்பனா நினைவு வந்தவளாக,
“காலையிலே இருந்து ஒரு ஆறு ஏழு தடவை உன் செல்லுக்கு ஃபோன் செய்தான்... ஏன் வீட்டில வச்சிட்டு போனேன்னு கத்த போறான்னு நினைக்குறேன்...” என்றாள்.
யோசனையோடு மாடி ஏறி, சாத்தி இருந்த கதவை திறந்து உள்ளே வந்த பாரதி,
“கூப்பிட்டீங்களா?” என்றாள்.
அவளையே ஒரு சில வினாடிகள் பார்த்தவன்,
“சாரி...” என்றான்.
அதிசயமாக கணவன் அழைக்கவும் என்னவோ ஏதோவென்று குழம்பி நின்றிருந்தவள் அவன் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தாள்.
“என்ன புதுசா சாரி? ஏன் சாரீ வாங்க மறந்துட்டீங்களா?” என்றாள் புன்னகையோடு.
கொஞ்சம் திகைப்பாக அவளை பார்த்தான் அவன்,
“உனக்கு தெரியுமா?”