🌼🌸❀✿🌷
மதிய உணவை முடித்து திரும்பியவனுக்கு, காலையில் அவன் எரிந்து விழுந்ததும் பாரதியின் கலங்கிய விழிகளும் நினைவில் வந்தது... அதற்கு மேல் அமைதியாக இருக்க இயலாது மனைவியின் செல்போனை அழைத்தான் அவன். அந்த பக்கம் ரிங் போனதே தவிர எடுக்கப்படவில்லை. அவளுக்கு கோபமா? பொதுவாக பாரதி அவனிடம் கோபத்தை காட்டுபவள் அல்ல. ஆனால் அவளின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு தானே?
விக்ரம் மனைவி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான்... முன்பெல்லாம் அவன் இது போல் அவளிடம் கோபமாக எதையும் சொன்னதில்லை...
அவர்கள் திருமணம், கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்ற, பெற்றோர் நிச்சயித்து நடந்த திருமணம். பெண் பார்க்கும் படலத்தில், முதல் முறை பார்த்த உடனேயே இருவருக்கும் பிடித்து விட, இருவரும் செல்ஃபோன் எண் பகிர்ந்துக் கொண்டு, தங்களின் எதிர்கால வாழ்வை பற்றி போனில் பேச தொடங்கினார்கள்... ஆனால் எதிர்பாராத விதமாக செல்வமும், புகழும் பெற்று விளங்கும் துரைசெல்வம் குடும்பத்தினர் பாரதியை எங்கேயோ பார்த்து பிடித்து போய் பெண் கேட்டு வர, சிறு குழப்பம் ஏற்பட்டது.
துரைசெல்வத்தின் மகன் சஞ்சயிடம் எந்த குறையும் இல்லை. குணத்தில் விக்ரமிற்கு இணையாக இருந்த சஞ்சய், பணத்தில், செல்வாக்கில் அவனை விட பல அடி உயர்ந்து இருந்தான். மகளின் வாழ்வு சஞ்சயுடன் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்து பாரதியின் பெற்றோர் அவளை சஞ்சய்க்கு மணம் முடிப்பது என்று முடிவு செய்தார்கள். ஆனால் பாரதி இதில் எல்லாம் மனம் மாறிவிடவில்லை. விக்ரமை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று அடம் பிடித்தாள்.
விக்ரமின் பெற்றோருக்கு, அவர்களின் மகன் தான் உலகில் உள்ள மற்ற அனைத்து ஆண்களையும் விட சிறந்தவன்! என் மகனை வேண்டாம் என்ற இடத்தில் ஏன் சம்மந்தம் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். ஆனால் விக்ரம் இளகவில்லை. பாரதியை தான் மணம் முடிப்பேன் என்று வைராக்கியத்தோடு இருந்தான் அவன்.