அந்த ராத்ரி எவ்வளவு அழுதேனோ, அந்த அலட்சியத்தெ எப்படித் தாங்கிக்கிட்டேனோ, யாருக்குத் தெரியும்? நான் அழுதா யாரு கஷ்டப்படப் போறவங்க? நான் கோவிச்சிக்கிட்டா யாரு வேண்டப் போறவங்க? அவர் செய்ற தப்புகளெ நான் எடுத்துச் சொல்றேன்னு, குறை சொல்றேன்னு என்மேலே அவருக்குக் கோவம். நானுன்னா புடிக்காம போனதுக்கு அதான் காரணம்! அவருக்கு நல்ல பழக்கங்க குறைவு. அவரெ மாத்தற்துக்கு முயற்சிக்கக் கூடாது. வாதாடக் கூடாது. குறை சொல்லக் கூடாது. சரின்னு சொல்லணும். இன்னும் உற்சாகப் படுத்தணும். எப்படிச் செய்ய முடியும்?
அன்னக்கிப் பகல் நான் சாப்பிடல்லே. அந்த ராத்ரி கூடப் பசி எடுக்கலெ. ஆனா பாபுவுக்காக... தாயாச்சே! பாபுவெப் பட்டினி போட முடியுமா? சாதம் சாப்ட்டுட்டு பாபு பக்கத்தலெ படுத்துக்கிட்டேன். யார் தூங்கலேன்னாலும் பொழுது விடியுது. அன்னக்கி பொங்கல் பண்டிகெ! திருவிழா! நான் செவப்பு பட்டுப் புடவெ கட்டிக்கிட்டு பாபுவுக்கு வெள்ளை சில்க் புஷ்கோட் போட வேண்டிய நாள்! கோவா செஞ்சி சாப்ட்டுட்டுப் புது சினிமா பாக்க வேண்டிய நாள்! ஆனா கண்ணீரோடெ பொங்கல் லட்சுமிக்கு வரவேற்பு சொல்ல முடியாமெ போயிட்டேன். சாதாரண சமயல் செஞ்சி பாபுவுக்கு மட்டும் புதுச்சட்டெ போட்டு உக்காந்துட்டேன். மத்தியானம் பன்னண்டு மணி இருக்கும். வந்தார். சாதம் போட்டேன் துகையல், ரசத்தோடு.
'இன்னக்கி ஒண்ணும் பண்ணலியா?'
'இல்லெ'
'ஏன்?'
'யாருக்காக?'
'நான் செத்துட்டேன்னு நினெச்சிட்டியா?'
'..............'