’காதல், கல்யாணம் இவைபற்றி வேதாந்தம் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பின்னர்தான் மீனா விஷயத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டும். கோபாலனைப்பற்றிக் குற்றம் சொல்வதாகவும் இருக்கக் கூடாது. நடந்திருப்பதையும் தெளிவாகச் சொல்லவேண்டும். காதல் விவகாரங்களில் அனுபவம் எதுவுமே இல்லாத பார்வதிக்கு இது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது.
திருவாளர் வேதாந்தத்தைச் சந்தித்து உரையாடப் போவது இதுதான் முதல் தடவை. முதல் முறையாக அவரைச் சந்திக்கப் போகும்போது இம்மாதிரியான காதல் விவகாரத்தையா எடுத்துக் கொண்டு போகவேண்டும்?
இன்னொரு புறம் காதலைப்பற்றிய உணர்வு அவள் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டிருந்தது.
மீனா - கோபாலன் நட்பில் குற்றம் இருப்பதாக அவளால் ஊகிக்க முடியவில்லை. தவறு ஏதும் நேராத வரையில் மீனாவும் கோபாலனும் நெருங்கிப் பழகுவதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?
பார்வதி யோசித்தாள். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு திருவாளர் வேதாந்தத்திடம் போக வேண்டியது அவசியந்தானா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் வேதாந்தம் இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்; என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ஆவல் தூண்டியது.
காலமெல்லாம் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட பார்வதிக்கு, காதல் கல்யாணம் பற்றிய அனுபவமே இல்லாத பார்வதிக்கு, கல்வியும் கல்லூரியுமே உலகம் என வாழ்நாளை வீணாக்கிவிட்ட பார்வதிக்கு இப்போது ஒரு புதிய உணர்வும் உற்சாகமும் தோன்றியுள்ளன.
இந்த நிலைக்குக் காரணம் சேதுபதிதான்.
சேதுபதியின் உறவை அவருடைய நட்பை அவள் விரும் பினாள்; எந்நேரமும் அவர் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எண்ணினாள். இந்த ஆசைக்கு, விருப்பத்துக்கு, எண்ணத்துக்கு என்ன காரணம் என்பதை அவளால் கூற முடிய-வில்லை. சேதுபதியிடமே கூடச் சொல்ல முடியாமல் இரகசியத்தில் மௌனமாக இருந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளப்போக்கில் இப்போது பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது.
நிறையப் படித்துள்ள பார்வதிக்கு, பல நூல்களை ஆராய்ந்து பட்டங்கள் பெற்றுள்ள பார்வதிக்கு இத்தனை அறிவும், ஆற்றலும் இருந்தும் தன் சொந்த வாழ்க்கையை மலரச் செய்து கொள்ளத் தெரியவில்லை. அனுபவத்தோடு அறிவு சேருகிறபோதுதான் மலர்ச்சியும் ஏற்படுகிறது. இப்போதுதான் அந்த அனுபவம் அவளுக்குக் கிட்டியிருக்கிறது.
பார்வதி காரைவிட்டு இறங்கும்போதே வாசலில் காத்திருந்த வேதாந்தம் ”வாருங்கள்