அந்த மவராசன் தான் கடைபோட காசு கூட கொடுத்தார்... ஒன் நயினாவும் கண்டுக்கல... முப்பது முப்பத்தஞ்சு வருஷமா... இங்கேயே கடை போட்டிருக்கேன் குயந்தே... நீ காலி பண்ணச் சொல்றது நாயமா குயந்தே...”
‘குயந்தே’ இப்போது, கூப்பாடு போட்டது.
“ஒன் மனசில என்னதான் நினைச்சிகிட்டே... திண்ணைய... அசிங்கமா வைக்க முடியாது... மரியாதியா... இப்பவே... கீழே இறங்கு... இறங்குறியா... இல்ல இறக்கட்டுமா?”
“இப்படிச் சொன்னா எப்படி குயந்தே... இந்த தள்ளாத வயசுல... எங்கே குயந்தே போவேன்...”
“எங்கேயாவது போ... எனக்கென்ன... தெருவுல போற நாய்க்கெல்லாம்... நான் இடம் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா...”
“எனக்கு எதுக்கு மரியாதி கொடுக்காட்டாலும்... வயசுக்காவது மரியாதி கொடு குயந்தே... நாயி நரியின்னு வாய்க்கு வந்தபடி பேசாத குயந்தே... அப்புறம் ஒன் வாய்தான் அழுவிப் போயிடும் குயந்தே...”
“அந்த அளவுக்கு திமுறு வந்துட்டா ஒனக்கு... பாத்துப்புடலாம்...”
வீட்டுக்காரி, பயங்கரமாக பல்லைக் கடித்துக் கொண்டு கோணியை அறுத்தாள். ஆயாவின் ஸ்டவ் அடுப்பை தரதரவென்று இழுத்து, திண்ணைக்குக் கீழே போட்டாள். இந்த முயற்சியில், வாணலியில் கொதித்த எண்ணெய், ஆயாவின் கை காலில் விழுந்தது. அவள் சதையை வேகவைத்து கொதித்தது. ஆயா, வலி பொறுக்க முடியாமல் கத்தினாள்.
“அய்யோ... மாரியாத்தா... இந்த அநியாயத்த கேட்க ஆளில்லையா... ஆளில்லையா? குயந்தே... வீட்டுக்கார குயந்தே... இந்த எண்ணைய எடுத்து என் மேல வாணுமுன்னாலும் கொட்டு... ஆனால் என்னோட... ‘பொயப்ப’ கெடுத்திடாத குயந்தே... கெடுத்திடாதே...”
வீட்டுக்காரி விடவில்லை. ஆயாவின் இட்லி தட்டையும் எடுத்துக் கீழே போட்டுவிட்டு, கண்ணாடிப் பாத்திரங்களையும் இறக்கிவிட்டு, ஆயாவின் கைகளைப் பிடித்து “மொதல்ல கீழே இறங்கு... ஒங்களுக்குல்லாம் வாயால சொன்னால் பத்தாது” என்று கீழே இழுத்த போது, ராக்கம்மா வந்தாள். வீட்டுக்காரியின் கை போகிற இடமெல்லாம் ஆயாவின் உடம்பு முழுவதும் ஒட்டு மொத்தமாக, பூசணிப்பழம் மாதிரி அலைக்கழிவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குத் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. வீட்டுக்காரியின் கையைப் பிடித்து, மடக்கித் தள்ளினாள். அந்த வேகத்தில், வீட்டுக்காரி எதிரே இருந்த குறுந்திண்ணையில் நெற்றி மோத, அலங்கோலமாக விழுந்தாள். அதை விட, அதிக அலங்கோலமாக சத்தம் போட்டாள்.
“என்னையாடி... அடிச்சிட்டே... என்னையாடி... அடிச்சிட்டே... அய்யோ... எனக்குத் தலை சுத்துதே... தலை சுத்துதே...”