வேணுமுன்னால்... ஒங்க வேன் போகட்டும்... இதுல எல்லாருமே ஏழை பாழைங்க... செத்துப்போனால்... தேரெடுக்கக் கூட காசில்லாதவங்க... அதனால... இந்த வேனாலயே... எங்களை மோதி கொன்னுட்டு... அப்படியே எங்க பிணத்தையும் எடுத்துப் புதைச்சுட்டுப் போயிடுங்க...”
மல்லிகா, சொன்னதுடன் நிற்காமல், வேனுக்கு முன்னால் போய் நின்றாள். ‘இட்லி’ ஆயா, மெள்ள மெள்ள நடந்து, மல்லிகாவுடன் சேர்ந்து கொண்டாள். கந்தசாமியின் மனைவி, ஓடிப் போய் நின்றாள். தயங்கி நின்றபடி, கைகளை நெறித்துக் கொண்டிருந்த செல்லம்மாவை, சந்திரா தள்ளிக் கொண்டே போய், வேனுக்கு முன்னால் போய் நின்றாள். அந்த வீட்டின் அத்தனைப் பெண்களும், வழி மறிப்பது போல் நின்ற போது, வழியெங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெருங் கூட்டத்தின் ஒரு பகுதியும், வேனுக்கு முன்னால் போய் நின்றது.
போலீஸ்காரர்கள், வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள். அதாவது யோசிக்கத் துவங்கினார்கள். ஒருவர், ஒயர்லஸ் மூலம், கமிஷனர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டார். ‘லத்தி சார்ஜ் பண்ணலாமா’ என்பது மாதிரி கேட்டார். ஆனால் அங்கிருந்து, டெப்டி கமிஷனர் வந்து பார்க்கப் போவதாக தகவல் வந்தது. போலீஸ்காரர்களின் முகங்களிலும், கரங்களிலும் முறையே ஈயும், லத்திக் கம்பும் ஆடவில்லை. ‘வேன்’ முன்னால் நின்ற கூட்டம், நேரம் ஆக ஆக, கம்பீரப் பட்டுக் கொண்டு வந்தது.
கால் மணி நேரத்திற்குள், வெளியே ஒரு கம்பியை நீட்டிக் கொண்டு, ஜீப் வந்தது. டெப்டி - கமிஷனர் இறங்கினார். போலீஸ்காரர்களின் சல்யூட்டுக்கள், அவரின் நடைக்குத் தாளமாக இருந்தது.
மல்லிகா, டெப்டிக்கு முன்னால் நின்று கொண்டு “நீங்களே விசாரிங்க ஸார்... இதோ... இந்த ஆயாவைப் பாருங்க ஸார்... முப்பது வருஷமா... இந்தத் திண்ணையில... கடை போட்டு... வாழ்கிறவள்... இந்தம்மா... ஆயாவை... கீழே இழுத்துப் போட முயற்சி செய்த போது... இந்த ராக்கம்மா, ஆயா அடிபடாமல் இருக்க இந்த அம்மாவை தள்ளியிருக்காள்... இந்த அம்மா மேலே பட்ட காயம் தற்செயலானது... ஆயா மேலே பட்டது அடாவடித்தனமானது... ஆனால் ஒங்க போலீஸ்காரங்க... ஆயாவையும், ராக்கம்மாவையும் ‘வேன்ல’ ஏறச் சொல்றாங்க... இந்த அம்மா ஏறக்கூடாதாம்... என்ன ஸார் நியாயம்? அதனால தான் சொல்றோம்... ஒண்ணு... எங்களையும் கூட்டிக்கிட்டு போங்க... இல்லேன்னா கொன்னுட்டுப் போங்க... இதைத் தவிர... ஏழை பாழைகளால என்ன செய்ய முடியும்... ஏழைகள் ஒற்றுமையாய் இருக்கக் கூடிய ஒரே விஷயம்... இந்த மாதிரியான அவல நிலையில்தான்...”
டெப்டி கமிஷனர், தன் பெல்ட்டைப் பிடித்துக் கொண்டே யோசித்தார். இரண்டு தரப்பையும், ‘வேனில்’ ஏற்றாத போலீஸ்காரர்கள் மீது அவருக்குக் கோபம் வந்தது உண்மைதான். ஆனாலும்,