அந்த உண்மையை முகத்தில் கோர தாண்டவமாட விடவில்லை. அமைதியாகப் பேசினார்.
“நடந்தது நடந்துட்டு... இனிமேல் ஒற்றுமையாய இருக்கதாய்... இரண்டு தரப்பும் எழுதிக் கொடுத்தால்... இதோடு விட்டுடுறோம்... இல்லன்னா...”
மல்லிகா... பதிலளித்தாள். “ஸார்... எலியும், பூனையும் சண்டைப் போடுதுன்னு சொல்வது மாதிரி இது... ஏன்னா... சண்டையைத் துவக்குனது இந்த அம்மா... அதனால அதை முடிக்க வேண்டியதும் அவங்க தான்... இருந்தாலும் பரவாயில்லை. பெரியவரான ஒங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாங்க தகராறை முதலில் துவக்க மாட்டோமுன்னு எழுதிக் கொடுக்கோம்... சந்திராக்கா... ஒரு பேப்பர் கொண்டுவா...”
மல்லிகா, சந்திரா கொடுத்த காகிதத்தில் மடமடவென்று எழுதினாள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். ஆயாவால் தான் முடியவில்லை.
“குயந்தே... நீ சொல்லிக் கொடுத்த கையெழுத்து இதுக்கா பயன்படணும் குயந்தே...”
“இதுக்குத்தான் பயன்படணும். படிச்சுப் பட்டம் பெற்ற பலர், தங்கள் கையெழுத்தை... எது எதுக்குல்லாமோ போடும் போது, நீங்க உரிமையை நிலை நாட்டற போராட்டத்துக்காகப் போடுறதுக்கு பெருமைப் படணும் ஆயா.”
வீட்டுக்காரம்மா, பேசாமல் நின்றாள். இன்ஸ்பெக்டர் அண்ணன் பெயரைச் சொல்லி, எழுதாமல் இருந்து விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் இங்கிதம் தெரியாத ரமணன், அக்காவுக்கு உதவி செய்வதாக நினைத்து, ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதி, அவளிடம் கையெழுத்துப் போட நீட்டினான்.
மல்லிகா இடைமறித்தாள்.
“ஸார்... ஆயாவோட... திண்ணைக் கடையை ஒன்றும் செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க சார்.”
டெப்டி - கமிஷனர், தலையாட்டிக் கொண்டே பேசினார்.
“ஆமாம்மா... அதையும் எழுதிடுங்க... வேணுமுன்னா ஸிவில் கேஸ் போட்டு கடையை எடுங்க... கிரிமினலா போகாதீங்க...”
வீட்டுக்காரி, எழுதமாட்டாது எழுதியதில், ஆயா கடைக்குப் பாதுகாப்பு அங்கீகாரம் கொடுத்து எழுதி, முக்கி முணங்கி கையெழுத்துப் போட்டாள்.
டெப்டி - கமிஷனர், அதை வாங்கிக் கொண்டு, ஜீப்பில் ஏறப் போனார். ஆயா பேசாமல் இருப்பாளா?
“போலீஸ் குயந்தைங்கா... என் கையால சுட்ட இந்த வடையைத் தின்னுட்டுத்தான் நீங்க போகணும்...”