ஒரு போலீஸ்காரர் ‘வான்’ கதவை முற்றிலும் திறந்து கொண்டு வெளிப்படும் போதே, “யாரும்மே... ராக்கம்மா... யாரும்மே தங்கம்மா...” என்று அதட்டினார்.
“நான் தான் ராக்கம்மா...” என்றாள் அந்தப் பெயருக்குரியவள் கம்பீரமாக.
“அந்த அம்மாவை எதுக்குமே அடிச்சே...”
மல்லிகாவிற்கு, விஸ்வரூபம் எடுத்தது போலிருந்தது. கல்லூரி மேடையில் சிலிர்த்து நிற்பாளே அப்படி.
“ஸார்... ஒரு விஷயம்... தெரியாமத்தான் கேக்குறேன்... சட்டம் எல்லோருக்கும் சமமுன்னா... சட்டத்தை அமல் செய்கிறவங்க... எல்லோரையும் சமமாய் நினைக்கணுமுன்னு அர்த்தம்... அவங்க... பணக்காரி... அதனால் அம்மா... இவங்க... ஏழை... இதனால ‘மே’. ஒரு வேளை... பணக்காரியை ஒரு மாதிரியும்... ஏழையை இன்னொரு மாதிரியும் கூப்பிடணுமுன்னு சட்டத்துக்கு ‘அமெண்ட் மெண்ட்’ எதுவும் வந்திருக்கா... தெரியாமத்தான் கேக்கேன்...”
போலீஸ்காரர்கள், மல்லிகாவைப் பார்த்தார்கள். கம்பீரமாக நின்ற ராக்கம்மாவைப் பார்த்தார்கள். பரிதாபமாகப் பார்த்த ‘இட்லி’ ஆயாவைப் பார்த்தார்கள். இது... ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய விவகாரம்... இந்தப் பொண்ணு... இங்க... கலாட்டாவை உண்டு பண்ணினாலும் பண்ணிடுவாள்.
முன்கோபி என்று பெயரெடுத்த ஒரு போலீஸ்காரரே, இப்போது சாந்த சொரூபியாகப் பதிலளித்தார்.
“நாங்களும்... மனுஷங்கதாம்மா... விசாரிக்காம எதுவும் செய்ய மாட்டோம்... ராக்கம்மா... வேன்ல ஏறு... ஆயா... நீயும் ‘வேன்ல’ ஏறு...”
“எக்ஸ்யூஸ் மி ஸார்... ஆயாவை... இந்த அம்மா காலைப் பிடித்து ‘வயலண்டா’ இழுத்ததுல... இதோ பாருங்க... ரத்தத்தை... இதோ பாருங்க... சதை பிஞ்சி வந்துருக்கதை... இந்த ராக்கம்மா மட்டும், சமயத்துல வராட்டால், எங்க ஆயா... கீழே விழுந்து... போக வேண்டிய இடத்துக்குப் போயிருக்கலாம்... ஆயாவை... பலாத்காரமாய் இழுத்த... இந்த வீட்டுக்கார அம்மாவையும்... நீங்க ‘வேன்ல’ ஏத்தணும்...”
ஒரு போலீஸ்காரருக்குக் கோபம் வந்தது.
“நீ லிமிட் தாண்டிப் போறேம்மா...”
“இதை விட்டு லிமிட்டைத் தாண்டி... நீங்க கொண்டு போறதாய் இருந்தால்... எல்லாரையும் கொண்டு போகணும்...”
“இல்லன்னா...”
“நாங்க... எல்லாரும்... வேனுக்கு முன்னால... நிற்கப் போறோம்... எங்களை பிணமாக்கிட்டு