”தலையில் இடித்துக் கொண்டாயாடா மூர்த்தி? குனிந்து வரமாட்டாயோ?" என்று கேட்டுக் கொண்டே பார்வதி சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.
"ஊர் தான் மாறவில்லை என்றால் வீட்டையாவது மாற்றிக் கட்ட மாட்டீர்களோ? வாசற்படிகளையாவது இடித்துப் பெரிதாக வைக்கமாட்டீர்கள்?" என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி சமையல் அறையில் போய் உட்கார்ந்தான்.
அவன் எதிரில் வாதாம் இலையைப் போட்டு முறுகலாக நாலு தோசைகளை வைத்தாள் பார்வதி அம்மாள். அதற்கு மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் போட்டுவிட்டு அவன் அருகில் மணையின் மேல் உட்கார்ந்தாள்.
ஊர் ஊராக ஓட்டல்களில் சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த மூர்த்திக்கு இந்தத் தோசையும் காப்பியும் அமிருதமாக இருந்தது.
”இப்படி நான் 'ஹோம்'லியாகச் சாப்பிட்டு எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று மாமி" என்று பரம திருப்தியுடன் சொன்னான் மூர்த்தி.
"அதென்னடா அது? என்னவோ எலி, பூனை என்று பேசுகிறாயே, பம்பாயிலே எலி உபத்திரவம் அதிகமா என்ன?" என்று கேட்டாள் பார்வதி அம்மாள். மூர்த்தி 'கட கட' வென்று சிரித்தான்.
அவன் சிரித்து முடிப்பதற்குள் கல்யாணம் இதைக் கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.
"ஆமாம், அங்கே எலிகள் உபத்திரவம் அதிகம் தான் நம் வீட்டு மச்சில் பூனைக்குட்டிகள் இருக்கின்றனவே. அதிலே ஒன்றை அவன் பம்பாய் போகும்போது கொடுத்து அனுப்பு!"