கணவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. முகத்தை ஒரு நொடிப்பு நொடித்து விட்டு அவள்.
”மூர்த்தி! உன் மாமா ஏதாவது கொஞ்சமாவது மாறி இருக்கிறாரா, பார்த்தாயா? அதே பேச்சு, அதே பரிகாசம்! இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்" என்றாள்.
”உன் மாமி மட்டும் ரொம்ப மாறி இருக்கிறாளோ? அப்படியே சின்னப்பெண் மாதிரி ஒடிசலான உடம்பும், படிப்படியான கூந்தலும், அப்படியே இருக்கிறாள். அன்று கழுத்திலே மூன்று முடிச்சுகள் போட்டு விட்டு அவளைப் பார்த்தபோது எப்படி என்னைப் பார்த்து முறுவலித்தாளோ அப்படியே இருக்கிறது இன்றும் அவள் சிரிப்பது!" என்று கல்யாணம் தம் மனைவியைப் பற்றிப் புகழ்வதில் ஈடுபட்டார்.
தெருவிலே ஒரே இரைச்சல் கேட்டது. பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளுமாக எல்லோரும் சேர்ந்து ஏகமாகச சத்தம் போட்டார்கள். கல்யாணராமன் உள்ளேயிருந்து வெளியே வந்தார். மூர்த்தியும் என்ன இரைச்சல் என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தான். அங்கே பெரியவர்களாக ஆண்களில் நாலு பேர் நின்றிருந்தார்கள். நடுத்தர வயதுடைய பெண்களில் நாலைந்து பேர்; மற்றும் குழந்தைகளின் கூட்டம்.
"என்ன விஷயம்?" என்று விசாரித்தார் கல்யாணம் அமைதியை இழக்காமல்.
" என்ன விஷயமா? இந்தப் பையன் தினம் குளிப்பதற்கு எங்கே போகிறான் என்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே பாலுவைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னாலே வந்தார் சேஷாத்ரி என்கிற ஒரு பெரியவர்.
கல்யாணம் பாலுவை ஏற இறங்கப் பார்த்தார். தண்ணீரில் நனைந்து, பாதி