நேரத்துக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள். குழந்தைகள் சண்டையில் நாம் தலையிடுவது அவ்வளவு உசித மில்லை" என்று கல்யாணராமன் கூறியதும் அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த-வர்களுக்கு சண்டை சப் பென்று போய் விட்டது. ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றார்கள்.
பீதியினால் உலர்ந்த வாயுடன் பாலு வாசல்குறட்டிலேயே தயங்கி நின்றான். கல்லாய்ச் சமைந்து நின்ற பவானி அவனைக் கோபத்துடன் உருட்டி விழித்துப் பார்த்தாள். ”வாசற்படி தாண்டி நீ உள்ளே வா சொல்கிறேன்!" என்கிற பாவம் அவள் முகத்தில் தெரிந்தது.
கல்யாணம் பாலுவையும் பவானியையும் கவனித்தார். பிறகு கண்டிப்புடன் “உள்ளே போய் ஈர நிஜாரை அவிழ்த்து விட்டு வேறு போட்டுக் கொள். இனிமேல் கிணற்றிலும் குளத்திலும் இறங்காதே. உனக்கேனடா இந்த வம்பெல்லாம்?" என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்.
"பாலூ!" என்று அழைத்தாள் பவானி.
தலையைக் குனிந்து கண்ணீரை மாலை மாலையாக உதிர்க்கும் அவனைப் பார்த்து அவள் மறுபடியும், ”பாலு! உன்னாலே நான் இந்த ஊரிலே மரியாதையுடன் வாழ முடியாது போல் இருக்கே" என்றாள் வெறுப்புடன்.
”கூப்பிடுகிறேன். பேசாமல் நிற்கிறாயேடா! வாடா உள்ளே !" என்று அவன் கைகளைப் பற்றித் தர தர வென்று இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விம்மி விசும்பிக் கொண்டே பாலு உள்ளே போனான்.
அடுத்த வீட்டுத் திண்ணையில் நின்று இது வரையில் இந்தச் சண்டையைக் கவனித்து வந்த மூர்த்தி, பவானியின் வீட்டுக்குள் சென்றான். அங்கே கூடத்தில் கையில் பிடித்த விசிறிக் காம்புடன் பாலுவை மிரட்டிக் கொண்டிருந்தாள் பவானி. ஒன்றிரண்டு அடிகள் விழுந்து அவன்