உலர்ந்ததும் உலராததுமாக இருக்கும் கிராப்புத் தலை. இடுப்பிலே அரை நிஜார் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. பயத்தால் அவன் திரு திருவென்று விழித்து எல்லோரையும் பார்த்தான்.
இதற்குள்ளாக இந்த இரைச்சலைக் கேட்டு பவானியும் வெளியே வந்தாள். அவள் வெளியே வராமல் இருந்தால் அதிகமாகப் பேச்சு வளராமல் போயிருக்கும். பாலுவின் தாயைப் பார்த்ததும் அங்கிருந்த ஸ்திரீகளின் கோபம் அதிகமாயிற்று. "இந்த மாதிரி ஒரு துஷ்டத்தனம் உண்டா ? நல்ல குழந்தை !" என்றாள் ஒருத்தி.
”குழந்தையை வளர்க்கிற லட்சணம் அப்படி!" என்று குழந்தை வளர்ப்பைப்பற்றி விமரிசனம் செய்தாள் மற்றொருத்தி.
"அடியே! கேட்டதில்லையோ நீ! கைம்பெண் வளர்த்த மகன் கழிசடை என்று" என்று ஒருத்தி எல்லை மீறிப்பேச ஆரம்பித்தாள்.
பவானி பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். கைம்பெண்ணாக இருந்தால் அவள் தான் பெற்ற குழந்தையைக்கூட வளர்க்க அருகதை அற்றவளாகப் போய் விடுகிறாளா? சமூகத்திலே பல்வேறு காரணங்களால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் தானா?
பாலு தாயைப் பயத்துடன் பார்த்துக்கொண்டே நின்றான்.
கல்யாணராமன் பேச ஆரம்பித்தார்.
”அந்தப் பையன் என்ன செய்தான் என்று ஒருத்தருமே சொல்லாமல், நீங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறீர்களே?" என்று கேட்டார்.
”என்ன செய்தானா பொழுது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே இந்தப் பையன் வந்து என் பையனைக் கிணற்றில் குளிப்பதற்குக் கூப்பிடுகிறான் சார்! மிதந்து வைத்தால் யார் பதில் சொல்கிறது