விலாப்புறத்தில் வரிகள் தென்பட்டன. அவைகளைத் தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தான் பாலு.
பவானியின் முகத்தில் கோபமும் துயரமும் நிரம்பியிருந்தன. ஒன்றும் தெரியாத பாலகன். பாம்பைப் பிடிக்கும் வயசு, துடிப்பு நிறைந்த சுபாவமுடையவன். அவனைக் கண்டால் ஊராருக்கு ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். புளியந் தோப்பில் நுழைந்து புளியம்பழம் உலுக்குகிறார்கள். கிணற்றில் குதித்து அமர்க்களம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி யெல்லாம் ஊரில் வம்பு கிளம்புவதில்லை. இந்தக் குழந்தை செய்யும் ஒவ்வொரு
விஷமத்தையும் அவர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் புகார் செய்யவும் வந்து விடுகிறார்கள். ஏன்?
"ஏன்?" என்று பவானி வாய்விட்டு உரக்கவே கேட்டுக் கொண்டாள் தன்னையே. அவள் பேச ஆரம்பித்ததும் மூர்த்தி சுவாதீனத்துடன் அங்கிருந்த ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டு, ”ஏனா? இந்த ஊரில் இருப்பவர்களுக்கே வயிற்றெரிச்சல் அதிகம். புத்திசாலியாக ஒரு குழந்தையைப் பார்த்தால் இவர்களுக்கு ஆகிறதில்லை . இந்த விஷயம் உங்களுக்குப் புதிசு. எனக்குப் புதிசல்ல” என்றான்.
வலுவில் வந்து பேசியும் அவனுடன் பேசாமல் இருந்தால் மரியாதைக் குறைவு என்று நினைத்து பவர்னி பதில் கூறினாள்.
"பாலு எவ்வளவோ சாதுவாக இருந்தான். இப்பத்தான் ஒரு வருஷமாக அவன் பண்ணுகிற விஷமம் சகிக்கவில்லை. இவனை வைத்துக்கொண்டு நான் படுகிற பாடு கொஞ்சமல்ல. ஊரிலே தகப்பன் இல்லாத பிள்ளை என்று இளப்பம் வேறே."
மூர்த்தி திடுக்கிட்டு பவானியை ஏறிட்டுப்பார்த்தான். களை பொருந்திய அந்த நெற்றி குங்குமத்தை இழந்தும் தன் அழகை இழக்கவில்லையே என்று