சேர்ந்தால் போச்சு. டி. ஸி. தான் வாங்கணும். ரைட்டரைக் கேட்டால் கொடுப்பார். டி.ஸி. வாங்க நாளைக்குப் போகட்டுமா?" என்றான் ஆவலுடன்.
பவானிக்கு ஒரே கவலை. புதுப் பள்ளிக் கூடத்தில் அவனைச் சேர்ப்பதற்கு யாராவது பெரியவர்களாக ஏற்றுக் கொண்டு செய்தால் தேவலை என்று நினைத்தாள்.
அடுத்த வீட்டுக் கல்யாணராமன் அவளுக்கு எது வேண்டுமானாலும் செய்வார். ஒவ்வொன்றிற்கும் போய் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமே என்று யோசித்தாள் பவானி. வேறே அவளுக்காக உதவ அந்த ஊரில் யார் இருக்கிறார்கள்? மாசம் பிறந்தவுடன் நாலாம் தேதியன்று ஊரிலிருந்து ஐம்பது ரூபாய் வந்து கொண்டிருந்தது. மணியார்டர் கூப்பனில் ஒரு நாலு வரிகள் எழுதியிருப்பான் நாகராஜன். "பவானிக்கு ஆசீர்வாதம். பாலு சமத்தாகப் படித்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். உனக்கு மேலும் பணம் ஏதாவது தேவையானால் எழுதவும்" என்று இருக்கும்.
இரண்டு பேர் சாப்பிட மாதம் ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகிவிடுமா? கல்யாணராமன் பவானியிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூட வாடகைக்கு என்று வாங்கிக் கொள்வதில்லை. வீட்டை வாங்கி இப்படி இனாமாக விடுவார்களோ என்று நாலு பேர் பேசிக் கொண்டார்கள். "அதெல்லாம் என் இஷ்டம், உங்களுக்கு என்ன ஐயா?"
என்று அடித்துப் பேசினார் அவர்.
"அது ஒரு அரைப் பைத்தியம். ராஜா மாதிரி மருமகன் இருக்கிறான். அவனுக்குக் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வைத்து. இருக்கிறதை அவனுக்குக் கொடுக்கக் கூடாதா? மேட்டுக் கழனியிலிருந்த மனையைப் பள்ளிக்கூடம் கட்டத் தானம் பண்ணி விட்டதாமே!" என்று சிலர் பேசிக் கேலி செய்தார்கள்.