என்று தெரிந்ததும் அவர் மனம் வருந்தினார். அன்று காலையில் தெருவில் நடந்த சில்லறைச் சண்டைக்கு அப்புறம் அவர். மூர்த்தி பவானியின் வீட்டுக்குள் போய் விட்டு வந்ததை விரும்பவில்லை. "இவன் தத்துப் பித்தென்று பேசிக் கொண்டு அங்கே போவானேன்?' என்று தான் அவர் நினைத்தார். மூர்த்தி தெருத் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கல்யாணம் தாகத்துக்குச் சாப்பிட உள்ளே சென்றார். அங்கே பார்வதி வெள்ளரிப் பிஞ்சுகளைத் துண்டங்களாக நறுக்கி, மிளகும் உப்பும் சேர்த்துப் பொடி செய்து அதில் துண்டங்களைப் பிசிறி இரண்டு கிண்ணங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
"ஏது வெள்ளரிக்காய்? வாங்கினாயா என்ன?" என்று கேட்டுக் கொண்டே கல்யாணம் மணையில் உட்கார்ந்து கொண்டார்.
"ஆமாம். மேட்டுக் கழனியிலிருந்து அந்தப் பெண் பச்சையம்மாள் கொண்டு வந்தது. மூர்த்திதான் விலை பேசி வாங்கினான். அவன் தான் என்னமாகப் பேரம் பேசுகிறான் என்கிறீர்கள்? அந்தப் பெண்ணிடம் குழைந்து குழைந்து பேசி வாங்கினான்" என்று மருமகன் சமர்த்தை மெச்சி வாயாரப் புகழ்ந்து கொண்டாள் பார்வதி.
கல்யாணத்துக்கு இதைக் கேட்கவே அருவருப்பாக இருந்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், இப்படிப் பல்லைக் காட்டும் மூர்த்தியின் மேல் அவருக்கு ஆத்திரமாக வந்தது.
"இந்தா! சிறிசுகள் வந்தால் நீ பேரம் செய்து வாங்குவாயா? மூர்த்தி வாங்கினான் கீர்த்தி வாங்கினான் என்கிறாயே! அந்தக் கல்யாண விஷயம் மறந்துவிட்ட தாக்கும் உனக்கு! நீதான் எதையும் லேசில் மறந்து போகிறவளாயிற்றே' ' என்று கண்டித்தார் அவர்.
பார்வதி பதில் கூறுவதற்குள் கொல்லைக் கதவை திறந்து கொண்டு பவானியும் பாலுவும் உள்ளே வந்தார்கள். பாலு கல்யாணத்தின் அருகில் சென்று உட்கார்ந்து வெகு சுவாதீனமாகக் கிண்ணத்திலிருந்த வெள்ளரி