"இந்தக் காலத்தில், தான தருமம் செய்து அது பத்திரிகைகளிலும் வெளியானால் தான் சார் பெருமை!" என்றார் ஒரு பொறாமைக்காரர்.
இவர்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டு பார்வதி அவரிடம், "மூர்த்திக்கும் வயசாகிறதே, நல்ல இடமாக வந்தால் பாருங்களேன்" என்றாள். மூர்த்தியைக் கல்யாணராமன் கவனிக்கவில்லை என்று ஊரார் சொல்வது பார்வதியின் காதில் விழுந்தது. அதனால் அவள் கணவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்.
"நீயும் நானும் பார்த்துச் செய்து வைக்கிற கல்யாணத்துக்கு அவன் இசைந்து வருவானா? அவனுக்கு 'லவ்' இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ளவே பிடிக்காதே" என்றார் அவர்.
பார்வதிக்கு இந்தக் காலத்து வழக்கங்களெல்லாம் சிறிது தெரியும். கணவர் என்ன சொல்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் முகத்தில் வெட்கம் படர.."உங்களுக்கு என்ன வேலை? எதையாவது சொல்வீர்கள். அப்படி அவன் யாரையாவது 'லவ்' பண்ணுகிறான் என்று தெரிந்தால் அதன்படியே செய்து விட்டுப் போகிறது" என்றாள்.
"ஆகட்டும். பார்க்கலாம். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் போன்றது. இந்தப் பிள்ளைக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடுவது மிகவும் சிரமம். பேச்சிலும் செய்கையிலும் ஒழுங்கு தவறியவன். அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த ஒரு பண்புள்ள பெண் தான் வேண்டும்" என்று மனைவியைச் சமாதானம் செய்தார் கல்யாணராமன்.
மூர்த்தி பசுமலைக்கு வந்த நாட்களாக அவனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் கல்யாணராமன் தான். நாலு இடங்களுக்குப் போய் விட்டு வந்தவன் கௌரவமாகவும் கண்யமாகவும் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால் அவனுடைய போக்கு சிறிதும் மாறவில்லை