தன்னை அடித்ததற்காக அம்மாவை எல்லோரும் கண்டித்துப் பேசுவதைப் பாலு விரும்பவில்லை. ஆகவே அவன் கணீரென்ற குரலில்.."அம்மா அடித்தால் பரவா யில்லை மாமா. அதற்குப் பதிலாக எனக்கு இரண்டு பங்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ் போட்டு விட்டாள். அத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு, 'என் கண்ணே, ஏண்டா நீ விஷமம் செய்கிறாய்?' என்று கேட்டுக் கண்ணீர் விட்டாள்" என்றான் பாலு.
வெப்பத்தால் சுடும் மணல் வெளியின் அடித்தனத்திலே ஓடும் குளிர்ந்த நீரைப் போல தாயின் கருணை இதயத்தின் ஆழத்திலே தேங்கிக் கிடக்கிறது. சமயம் நேர்ந்தபோது அது பொங்கிப் பிரவாகமாக வெளியே வருகிறது. அழகிய சுனைகளையும் நீர் ஊற்றுக்களையும் வற்றாத ஆறுகளையும் தன் அகத்தே கொண்டிருக்கும் பூமிதேவி. குமுறும் எரிமலைகளையும், கொதிக்கும் ஊர் றுக்களையும் கூடத் தாங்கியிருக்கிறாள். தாயின் உள்ளத்தில் கருணையும் கண்டிப்பும், அன்பும் கோபமும் ஒன்றோடொன்று பிணைந்து தான் இருக்கும்.
அம்மா வேண்டுமென்று தன்னை அடிக்கவில்லை. ஊரார் ஏசுகிறார்களே என்று குமுறித்தான் அடித்தாள் என்பதை அந்த பிஞ்சு மனம் புரிந்து கொண்டதோ இல்லையோ? ”என் கண்ணே!" என்று அவள் அவனை அன்புடன் அணைத்துக் கொண்டவுடன் அவன் அடியை மறந்து விட்டான். இனிமேல் விஷமம் செய்யக் கூடாது.. என்று தீர்மானித்துக் கொண்டான்.
கல்யாணராமன் தன்னையே நொந்து கொண்டார் ஒரு கணம். விரிந்த கடலைப் போல வியாபித்து நிற்கும் தாயின் அன்புக்குச் சற்று முன் களங்கம் கற்பிக்க முனைந்தார் அல்லவா?
பார்வதி மட்டும் அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தேங்காய் எண்ணெயை எடுத்துப் பஞ்சில் தோய்த்து பாலுவின் விலாப் புறத்தில் தடவிக் கொடுத்தாள். பவானிக்குப் பாலுவின் விலாவைப் பார்க்கும் போதெல்லாம் இதயம் வலுத்தது.