Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 11 - மு. வரதராசனார்
வேறு பொழுது போக்குஇல்லாமல், மற்றொரு நாளும் ஒத்திகை பார்க்கப் போயிருந்தேன். முந்திய ஒத்திகையை விட அது நன்றாக அமைந்திருந்தது. சந்திரனுடைய பேச்சும் நடிப்பும் எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்தன. பெண் நடிப்பில் அவனுக்கு ஒரு தனித்திறமை இருந்ததை முன்பே கண்டேன். அன்றைய ஒத்திகையின் போது கதைத் தலைவனாக நடிக்கும் மாணவன் வரவில்லை. ஒத்திகை நிறைவேறுவதற்காக யாரேனும் அந்தப் பகுதியைப் படிக்க வேண்டியிருந்தது. சந்திரனையே படிக்கும் படியாகச் சிலர் கேட்டுக்கொண்டார்கள். சந்திரன் இசைந்து படித்தான். அவன் படிக்கவில்லை தலைவனாகவே நடித்தான். அதிலும் அவன் சிறந்து விளங்கினான். சந்திரனுக்கு அந்தப் பகுதியையே கொடுத்திருக்கலாம் என்றும் அதற்கு உரிய மாணவனைவிடச் சந்திரனே நன்றாக நடிக்கிறான் என்றும் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். கதைத் தலைவனாகவும் தலைவியாகவும் அவன் ஒருவனே மாறி மாறி நடிக்க நேர்ந்தபோது எல்லாரும் வியக்கும்படியாக இருவகை நடிப்பிலும் திறமையாக விளங்கினான். என்னையும் அறியாமல் நானும் ஒருமுறை கைதட்டிப் போற்றி ஆரவாரம் செய்தேன்.
ஒத்திகை முடிந்து வெளியே வந்தபோது ஒரு மாணவன் என்னைத் தொடர்ந்து வந்தான். "கல்லூரியில் சேர்ந்த பிறகு படிப்பைவிட இது போன்ற துறைகளில்தான் அக்கறை மிகுதியாகிறது" என்றான் அவன்.
"உண்மைதான்" என்றேன் நான். அந்த வகையில் எனக்கும் அவனுக்கும் இருந்த கருத்து ஒற்றுமை, எங்களை நெருங்கி வரச்செய்தது. தனித்தனியே முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்த நாங்கள் பக்கம் பக்கத்தில் சேர்ந்து நடக்கத்தொடங்கினோம்.
விடுதியின் கிழக்குப்பகுதியில் ஒரு சிமெண்டுத் திண்ணை இருந்தது. அங்கே அவன் உட்கார்ந்தான்; நானும் உட்கார்ந்தேன்.
"பெற்றோர்கள் எவ்வளவோ துன்பப்பட்டுப் பணம் அனுப்புகிறார்கள். நாம் பொறுப்போடு படிக்க வேண்டாவா?" என்றான்.
"ஆமாம்" என்றேன்.