"வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சம் தீருமே".
விடுதிச் செயலாளர் "அமைதி, அமைதி" என்று பலமுறை எழுந்து கேட்டுக்கொண்டார்.
மறுபடியும் சில குரல்கள் கேட்டன.
"நாங்கள் இனிமேல் தண்ணீர் பிடித்துக் கொட்டப் போவதில்லை, சாந்தலிங்கம்!"
"அவனுடைய அறையிலேயே போய் இனிமேல் சிறுநீர் கழிக்க வேண்டும். அதுதான் வழி"
"இங்கே என்ன பஞ்சாயத்து? வார்டனிடம் போங்கள்".
"சந்திரா! உன்னைக் குற்றவாளியாக்கும் முயற்சி இது. இருக்காதே எழுந்து வா"
"இமாவதி சந்திரன் எழுந்து வா."
அப்போது சிலர் கொல்லென்று சிரித்தனர். என் மனம் ஓர் அதிர்ச்சி உற்றது. இமாவதி என்ற பெயரைக் கேட்டதும், அன்று நாடகத்தின் முடிவில் நான் கண்ட அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. சந்திரன் முகம் கவிழ்ந்தபடி இருந்தான்.
"எழுந்து வா? சந்திரன்! எழுந்து வா" என்று தொடர்ந்து சில குரல்கள் கேட்டன.
சந்திரனும் எழுந்தான். செயலாளர் அன்போடு கேட்டுக் கொள்ளவே அவன் மறுபடியும் உட்கார்ந்தான். என் மனம் சாந்தலிங்கம் சொன்னவை சரியென்றும், அவற்றில் தவறு ஒன்றுமே இல்லை என்றும், சந்திரன் தண்ணீர் கொட்டியிருக்கலாம் என்றும், இல்லை என்றாலும் அன்பாகத் தன் குற்றத்தை உடன்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு எண்ணியது. ஆனாலும், அவனுடைய பழைய தொடர்பையும் குடும்பத் தொடர்பையும் எண்ணிப் பேசாமல் இருந்தேன். இவ்வளவு கூட்டத்தில், மனச்சான்றும் நீதியுணர்ச்சியும் உள்ள மாணவர் சிலராவது இல்லையா? அவர்கள் ஏன் தங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்? அநியாயத்துக்கு ஆட்கள் முந்துகிறார்களே, நியாயத்துக்குத் தயங்குகிறார்களே என்று பலவாறு எண்ணி ஏங்கிக்