கொண்டிருந்தேன். என் ஏக்கம் தீர ஒரு குரல் துணிவாகத் தெளிவாகக் கேட்டது.
"சாந்தலிங்கம் சொன்னதில் தப்பு என்ன?" என்று அந்தக் குரல் கேட்டதும், என் செவியில் தேன் வார்த்தது போல் இருந்தது.
"எப்படிக் கேட்கலாம்" என்று மற்றொரு குரல்.
மாணவர்கள் ஒரே கூட்டமாக நெருங்கி இருந்தபடியால், குரல் எழுப்பியவர்கள் யார் யார் என்று ஆட்களைக் காணமுடியவில்லை.
"சாலையில் எச்சில் துப்பினால் கேட்கலாம், சுகாதாரத்துக்குத் தீங்கு என்று."
"பஸ்ஸில் சுருட்டுப் பிடித்தால் கேட்கலாம், பலருக்குத் தீங்கு என்று."
"நடுத்தெருவில் காகிதம் கிழித்துப் போட்டால் கேட்கலாம், பொதுவாழ்வின் விதிகள் தெரியவில்லை என்று."
"இது நடுத்தெரு அல்ல, கேட்கக்கூடாது."
"இது பஸ் அல்ல, கேட்கக் கூடாது."
"இது பொது இடம். கேட்கலாம்."
"கேட்க உரிமை உண்டு."
"சொந்த வீடு அல்ல."
"மற்றவர்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கும்போது மற்றவர்களுடைய நன்மையைக் கவனித்தே நடக்க வேண்டும்."