எந்த வகையிலாவது நண்பர் சந்திரனுடைய மனத்தைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படியாக அவரை கேட்டுக்கொள்கிறேன். நீர் கொட்டவில்லை என்பதை மட்டும் கேட்டதாக நண்பர் சந்திரன் சொன்னார். அதுமட்டும் அல்ல. சுவரில் பெய்திருக்கக் கூடாது; பெய்தால் நீர் கொட்ட வேண்டும்" என்று சொன்னேன். சிறுநீர் கழிக்க அதற்கென்று பீங்கான் குழிவு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுநீர் கழிக்காமல், சுவரில் கழிக்கப்பட்டிருந்தது. சுவர் அந்தக் கெட்ட நாற்றத்தை நெடுநேரம் வைத்திருந்து பரப்பும் அல்லவா? எங்கே போனாலும் இந்தக் கொடுமையைக் காண்கின்றேன். இது தவறான பழக்கம் என்று உணர்த்துவதற்காகவே கேட்டேன். நண்பர் சந்திரன் என்னை மன்னிக்க வேண்டும்." என்று சொல்லிச் சந்திரனுடைய கையைப் பற்றி அவனுடைய முகத்தைப் பார்த்தான்.
சந்திரனும் அவனுடைய கைகளைத் தன் கைகளால் ஏற்றுக்கொண்டு தன் பக்கத்தில் உட்காரச் செய்தான்.
"இவ்வளவு தொல்லை இல்லை. மேற்கு நாட்டார் கண்டுபிடித்து அமைத்த மேல் தொட்டி நன்றாக வேலை செய்து வந்தால் போதும். அதில் தொங்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்தால், தண்ணீர் வேகமாக வந்து சிறுநீரை அடித்துப் போய்விடும்" என்றான் மாணவன் ஒருவன்.
"செயலாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வார்டனுக்குச் சொல்லி, முதலில் அந்த மேல்தொட்டிகளைப் பழுது பார்க்கச் சொல்லுங்கள்" என்றான் மற்றொருவன்.
"அப்படியே செய்தாலும் பீங்கான் குழியை விட்டு விட்டு, சுவரில் பெய்துவிட்டு வருகிறவர்களை எப்படித்தான் திருத்துவது?"
"கடவுள்தான் திருத்தவேண்டும்"
"அது பாவம் என்று புராணங்களில், திருக்குறளில் எழுதி வைத்தால்தான் நடக்கும்."
"அது மட்டும் போதாது. அப்படிச் சுவரில் பெய்தவர்களை மறுபிறவியில் நரகலோகத்தில் கொதிக்கும் இரும்புச் சுவரைத் தழுவுமாறு செய்து யமகிங்கரர் தண்டிப்பார்கள் என்று எழுதினால்தான் ஒழுங்காக நடப்பார்கள்."