எழுந்தவுடன், மற்றக் குரல்கள் ஒருவாறு குறைந்தன.
செயலாளர், ஏன் அதைத் தொடங்கினோம் என்று திகைத்து வருந்திய நிலையிலிருந்து மாறிச் சிறிது ஊக்கம் பெற்றவராய்த் தோன்றினார். "போனது போகட்டும். நடந்ததை மறந்து விடுவோம். இனி என்ன செய்வோம் என்பதைப் பற்றிப் பேசுவோம்" என்றார். கூட்டத்தில் இருந்த சிலர் மெல்ல நகர்ந்து தம் தம் அறைக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டம் போதும் என்று செயலாளர் பேசினார். "மேற்கு நாடுகளில் எங்கேயும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்காது. இதை எல்லாம் அவர்கள் இளமையிலேயே கற்று வளர்ந்திருப்பார்கள். காரணம் அங்கெல்லாம் இது குடும்பக் கல்வியாக இருக்கிறது. இங்கே குடும்பங்களில் உள்ளவர்களுக்கே இன்னும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் இரவில் எழுந்து எதிர் வீட்டு ஓரமாகச் சிறுநீர் கழித்து வருவது இங்கே வழக்கம். கண்ட இடமெல்லாம் துப்புவதும், பக்கத்து வீட்டு ஓரமாகக் குப்பையைக் கொட்டுவதும் நம் வீடுகளில் உள்ள பழக்கம். ஆகையால், சந்திரனையோ மற்றவர்களையோ குறை கூறிப் பயன் இல்லை. பொதுவாக நம் நாட்டுக்குறை என்று கருதித் திருத்தவேண்டும்" என்றார்.
அப்போது சாந்தலிங்கம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, "மேற்கு நாடுகளில் இந்த ஒழுக்கங்கள் இயல்பாக இருப்பதற்குக் காரணம் உண்டு. இங்கு இல்லாமைக்குக் காரணம் உண்டு. அங்கே பிறர்க்கு உதவி செய்வதே கடவுளுக்கு விருப்பமானது என்ற நம்பிக்கையின் மேல் சமயம் வளர்ந்திருக்கிறது. இங்கே இந்த உண்மை இலைமறை காய்போல் உள்ளதே தவிர, வெளிப்படையாக இல்லை. நேர்மாறாக, பிறர்க்குத் தீமை செய்தாவது பணம் சேர்த்து அருச்சனை, அபிசேகம் செய்வதைக் கடவுள் விரும்புவார் என்ற மூடநம்பிக்கை வளர்ந்திருக்கிறது. அங்கே பிறர்க்குத் தொண்டு செய்த சமயத் தலைவர்கள் பலர், இங்கே காட்டில் ஒதுங்கித் தவம் செய்தவர்களும், உலகம் பொய் என்று சொல்லித் தம்மளவில் மோட்சத்துக்குப் பாடுபட்ட பக்தர்களும் பலர். அங்குள்ள சமய அமைப்புகளில் மடங்களில் பல, பிறருடைய வாழ்வுக்கு உதவி செய்வதற்காக ஏற்பட்டவை. இங்கே விவேகானந்தரின் காலத்துக்குப் பிறகுதான் அப்படிப்பட்டவை சில ஏற்பட்டன. அதனால் இங்கே புண்ணியம் பாவம் என்று சொன்னால்தான் மதிப்பு உண்டு; சமுதாய நன்மை என்று சொன்னால் மதிப்பு இல்லை. சட்டம் என்று சொன்னால்தான் அடங்கி நடக்கிறார்கள்; நாகரிக வாழ்க்கை முறை என்று சொன்னால் கேட்டு நடப்பதில்லை. இதை மாற்றினால்தான் நமக்குச் சுதந்திரம் கேட்க உரிமை உண்டு; ஒருகால் அதற்குமுன் நம் தலைமுறையில் சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் வருந்துவோம். இந்த ஆர்வத்தால் ஏதோ பேசினேன். நான்