“என்னன்னு தெரியுது... எப்படின்னு சொல்லத் தெரியல!”
“தத்துவம் பேசுறியளோ. சரி, இப்போ சேலய அவுக்கப் போறியா மாட்டியா?”
“உயிர விட்டாலும் விடுவனே தவிர, சேலைய விட மாட்டேன்!”
கூடக்கூட பதிலளித்துக் கொண்டிருந்த சுயம்பு, “எம்மா” என்று கத்தியபடியே கீழே கிடந்து, கையைக் காலை ஆட்டினான். மல்லாக்கத் தூக்கிப் போட்டால் கரப்பான்பூச்சி எப்படி ஆடுமோ, அப்படி ஆடினான். இதற்குள் பிள்ளையாரின் வலது கால் சுயம்புவின் விலாவில் மீண்டும் உதைத்தது. அவன் “எய்யோ போனனே” என்று வலது பக்கம் புரண்டபோது, பிள்ளையார் இடது காலால் ஒரு உதை உதைத்து அவனை இடது பக்கம் புரட்டினார். உதைத்து உதைத்து அவனை, அந்த அறைக்குள் உருட்டிக் கொண்டே இருந்தார். இதற்குள் ஆறுமுகப் பாண்டி அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான். அவனை அந்தரத்தில் கொண்டு போய் நிறுத்தினான். பிள்ளையார் தீர்மானமாகக் கேட்டார்:
“சேலய அவுக்கிறியா இல்லையா? பெரியவன் நீ அவன் சேலயத் தொடப்படாது! ஒன்று அவன் சீலய அவனாவே கழட்டிப் போடணும். இல்லன்னா இந்த இடத்துலயே குழி வெட்டி அவனைப் புதைக்கணும். அவனக் கீழே போடு...”
கீழே விழுந்த சுயம்புவிடம், பிள்ளையார் அவன் இரண்டு கால்களிலும் ஒரு காலை வைத்து அழுத்திய படியே கேட்டார்.
“சேலைய கழட்டுடா...”
“நான் பொம்புள... கழட்ட மாட்டேன்!”
“கடைசியா கேக்கேன்...”
“எப்ப கேட்டாலும் சரி...”