“பெரிசில்லதான். ஆனால், கல்யாணச் சமயம். என்னடா சொல்றே பெரியவன்.”
“கலியாணப் பந்தலுல மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுக்குறதா ஒப்புக்கொண்ட பத்தாயிரம் ரூபாதான் இருக்கு.அதை எடுக்க முடியாதே!”
“ஏன் முடியாது? எல்லாப் பணத்தையும் எடுத்து தம்பிய ஆஸ்பத்திரில சேருங்க! எனக்கு கலியாணத்தை விட அவன் சுகமாகிறதுதான் முக்கியம்!”
“ஒன் கலியாணத்தைப் பத்தி நீயே பேசுற அளவுக்கு வந்துட்டியா...”
“காலத்துக்குத் தக்கபடி நீயும் மாறனும் மாப்பிள்ள. நம்ம கிராமத்து பயமவளுவ கூட ஆளப் பார்க்காம கழுத்தை நீட்ட நாங்க ஆடா மாடான்னு கேக்கிறாளுவ... மரகதத்த பெத்ததுக்கு நீ குடுத்து வச்சிருக்கணும். கத்தரிக்காய்னு சொன்னதால பத்தியம் முறிஞ்சிடாது. சரி. காலையில வாறேன்! ரெடியா இரு!”
ராமசாமிக் கிழவர் போய்விட்டார். பிள்ளையார் உள்ளே திரும்பிப் பார்க்காமலே பிடறியில், வாய் இருப்பது போல் பேசினார்.
“ஏழா, மரகதம்... ஒம்மாவ அவனுக்குத் தவிட்ட வச்சு ஒத்தடம் கொடுக்கச் சொல்லு. ஒனக்கு வராது. அந்த மூதேவிக்குத்தான் வரும். நல்ல கைராசி!”
இரவு, எட்டிப் பார்த்துக் கெட்டியானது.
அந்த வீட்டில் மோகனாவும், சின்னக் குழந்தையும் தவிர யாருமே சாப்பிடவில்லை. ஆறுமுகப் பாண்டியின் ஏழு வயதுப் பயல்கூட சாப்பிட மறுத்தான். வெள்ளையம்மா தண்ணிரைக் குடித்துவிட்டும், மரகதம் கண்ணிரைக் குடித்துவிட்டும் ஒடுங்கிவிட்டார்கள். சுயம்பு, அக்காள் அறையில் மல்லாந்து கிடந்தான். மரகதம் அவன் தலையை வருடி, வருடி கதை சொன்னாள். தந்தைக்காக சாம்ராஜ்யத்தையே துறந்த ராமன். தமையன் சொல்லை தட்டாத பாண்டவத் தம்பிகள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சுயம்பு, இடையிடையே ‘தெரியுது அக்கா