கூட அவன் முத்துக்குமாரிடம் கெஞ்சினானே தவிர, ஒரு மாவீரன் போல் மார்தட்டவில்லையே என்ற குறை. முறைப் பெண்கள் கிண்டல் செய்யும்போது கூட, தக்க பதிலடி கொடுக்கத் தெரியாமல், அந்தப் பெண்களோடு பெண்களாய்ச் சிரித்தவன்... அப்போது ஏகப்பட்ட பொறாமை... இப்போது ஆற்றாமையாய் வெளிப்பட்டது. கூடவே, ஊரில் தன்னை கண்களால் வளைய வளையப் பிடித்த பலசரக்குக் கடைக்கார பாண்டியனைக் கட்டியிருக்கலாமோ என்ற மறு பரிசீலனை.
வழக்கத்திற்கு விரோதமாய்ப் பேச்சு கொடுக்காமல் இருக்கும் மனைவியின் மனநிலை புரியாமல், ஆறுமுகப் பாண்டி தன்பாட்டுக்குப் பேசினான். அவளைத் தன் பக்கம் இழுக்காமல், மறுபக்கமாய் படுத்திருப்பதையும் மாற்றிக் கொள்ளாமல் பேசினான்.
“ஒரு நாளும் அடிக்காத உடன்பிறப்ப அடிச்சு நொறுக்கிட்டேன். என் கையால இடுப்பில தூக்கி வளர்த்த பயலுக்கு இடுப்புலய சூடு போட்டுட்டேன். இனிமேல் அவன் எங்க தேறப்போறான்... எனக்கு என்னவோ சந்தேகமாகவும் இருக்கு. பயமாகவும் இருக்கு. நாளைக்கே நர்ஸிங்ஹோம்ல சேர்க்க முடியாதுதான். ஆனால் எவ்வளவு ரூபா ஆனாலும் சரி. முடிவு தெரியற வரைக்கும் பார்த்துட வேண்டியதுதான். பால் பொங்கி வரும்போது பானை உடைஞ்சிட்டு. என்ன பேச மாட்டங்க...”
“பேசறதுக்கு என்ன இருக்கு. யார் யாருக்கு எது கொடுத்து வச்சிருக்கோ அதுதான் நடக்கும். எழுதாக் குறைக்கு அழுதா முடியுமா! ஆமா, ஒங்க பரம்பரையில வேற யாருக்காவது இப்படி வந்திருக்கா?”
“எனக்குத் தெரிஞ்சு இல்ல!”
“எதுக்காக இக்கன்னா போட்டுப் பேசறீங்க?”
“காரணம் இருக்கு. ஒரு மனுசனோட பரம்பரய நினைச்சுப் பார்த்தால், அதுவே ஆதி அந்தம் இல்லாதது. என் தகப்பன் வழித் தாத்தா, தாய்வழித் தாத்தா, அந்த தாத்தாக்களோட தாய்வழித் தாத்தா, தகப்பன் வழிப் பாட்டி. நெனச்சுப் பார்த்தால், உலகம் முழுசுலயும் நாம ஏதோ ஒரு வகையில, ஒரு கிளையில, ஒரு இலையா இருப்போம்! ஆனால், நமக்குத்தான் நம்ம தாத்தாவுக்கு மேல யாருமே தெரியாதே! மிஞ்சிப் போனால் பூட்டி. நம்ம வேரை நாம