(Reading time: 16 - 31 minutes)
Vata malli
Vata malli

வெள்ளையம்மா, பித்துப் பிடித்து நின்றாள். மரகதம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து அண்ணனின் கால்களைக் கட்டிக்கொண்டாள். மோகனா வெளியே அண்ணியின் பக்கத்தில் அவளைப் போலவே வெறுப்போடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு நின்றாள். ஆனாலும், சித்தப்பா, சித்தப்பா என்று ஓடப் போன பொடிப்பயலை, தாய்க்காரி தடுக்கவில்லை.

  

பிள்ளையார் அலுத்துப்போனபோது, ஆறுமுகப் பாண்டி முன்னே வந்தான். அமைதியாகத்தான் கேட்டான்.

  

டேய், சுயம்பு! இனிமேல் சேல கட்டுவியா... ஆமான்னா தலையாட்டுறே...!”

  

அண்ணன்காரன், கால்களை இறுக்கிப் பிடித்த மரகதத்தின் கைகளை மிதித்துக்கொண்டே முன்னேறினான். கையிலுள்ள இரும்பு முனையை சுயம்புவின் காலில் வைத்தான். புடவை மூடிய முட்டியில் வைத்தான். அங்குமிங்குமாய் நெளிந்த இடுப்பின் இரு பக்கமும் வைத்தான். ரிப்பன்கள் கட்டிய பிடரியில் வைத்தான். பொசுங்கிய வாடையோடு பட்ட இடமெல்லாம் பொசுங்கியது. ஒவ்வொரு சூட்டுக்கும் ஒரு கேள்வி... “டேய் சேல கட்டமாட்டியே...” ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில்! ‘கட்டுவேன், கட்டுவேன்’ என்பது மாதிரி தலையாட்டும் பதில்!

  

ஆறுமுகப்பாண்டியின் கால்களை, மரகதம் அசைய விடாது பிடித்துக் கொண்ட போது, பிள்ளையார் பெரிய மகனின் வேலையை மேற்கொண்டார். ஒரே குத்து. சுயம்பு வாயில் ரத்தம். ஒரே சூடு. தோள்பட்டையில் வைத்த கம்பியை எடுக்கவில்லை. எரிந்த புகை மறையவில்லை. மரகதம் ஆவேசமாய் எழுந்து ஓடிவந்து, அப்பனைக் கீழே தள்ளினாள். அவர் கையிலிருந்த இரும்புக் கம்பியை சூலாயுதம்போல் பறித்தாள். கீழே விழுந்த அப்பனை நோக்கி அதைக் கொண்டு போகப் போனாள். அவரோ - அந்தப் பிள்ளையாரோ, “ஏமுழா நிக்கே! போடு! சூடு போடு! இந்தக் கோலத்த பார்க்காம இருக்க என் கண்ணுல சூடு போடு!” என்றார். உடனே அவள், அந்தக் கம்பியை இன்னொரு கைக்கு மாற்றி எந்தக் கை அப்பனுக்குச் சூடு போட நினைத்ததோ, அந்தக் கையிலேயே சூடு போட்டாள். சதை சதையாய் தன்னைத்தானே பொசுக்கினாள். புகை புகையாய் சுட்டாள்.

  

இதற்குள், மூலையில் சாய்ந்து கிடந்த மரகதம் கத்தினாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.