(Reading time: 16 - 31 minutes)
Vata malli
Vata malli

என் உடன்பிறப்பு வாயில துரை தள்ளுதே. கையும் காலும் சும்மா கிடக்குதே! அடிச்சுக் கொன்னுட்டியளே”

  

சுயம்பு, சுரணையற்றுக் கீழே கிடந்தான். வாயில் நுரையும், ரத்தமும் மாறி மாறி வந்தன. ஒன்றோடு ஒன்று கலந்தும் வந்தன. மரகதம் தம்பியை மடியில் எடுத்துப் போட்டுக்கொண்டாள். அவன் கையை எடுத்தே தன் தலையில் அடித்துக் கொண்டாள். பிறகு சுரணை பெற்று ரத்தத்தைத் துடைத்து விட்டாள். கைகால்களைப் பிடித்து விட்டாள். துடைக்கத் துடைக்க ரத்தம். பிடிக்கப் பிடிக்க சதைகள். வெள்ளையம்மா ஒப்பாரி போட்டாள். சுயம்புவின் முகத்தோடு முகம் முட்டி, விம்மி விம்மி பேசினாள்.

  

நீ எப்படி இருந்தாலும் நான் ஒனக்கு தாய் தானடா. என் வயித்துல பொறந்தது எப்படியும் இருந்துட்டுப் போகட்டுமே. ஒங்களுக்கு என்ன வந்துட்டு. என் ராசா.என் சீமைத்துரையே... என் செவ்வரளிப் பூவே. ஒன்னக் கொல்லு கொல்லுன்னு கொன்னுட்டானுவளே... நீ பிழைப்பியாடா...”

  

அப்பனும், மகனும், சுயம்புவையே பார்த்தார்கள். அவனுக்கு லேசாய் தெளிவு வந்தது போல் கண் திறந்ததும் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். திண்ணையில் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சுவரில் சாய்ந்தார்கள். வீட்டுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரே கூட்டம். உள்ளே வர யோசிக்கும் கூட்டம். முற்றத்தில் தம்பி சண்முகம். பக்கத்தில் அவர் மனைவி. உள்ளே இப்போது மரகதம், தம்பிக்கு உபதேசிப்பது கேட்டது. “சரி, நீ எடுக்காட்டாலும் என்னயாவது எடுக்க விடு” என்ற யாசகப் பேச்சு! விம்மல்! வெடிப்பு! “இப்படித் தான் நல்ல பிள்ளையா நடந்துக்கனும்” என்ற முடிவுரை.

  

பிள்ளையாருக்கும் லேசாய்த் தெளிவு. முற்றத்தைப் பார்த்தார். பத்தாண்டு காலப் பகை போய், சின்ன வயதிலாடிய தெல்லாங்குச்சி ஆட்டமும், கிளித்தட்டு விளையாட்டும் மனத்தில் வியாபித்தன. தம்பியைப் பார்த்துக் கத்தினார்.

  

ஏலே சண்முகம்.ஒன் வீட்டுக்குள்ள வாறதுக்கு யாரு கிட்டடா யோசனை கேட்கணும்... இதுலதான்டா நீ பொறந்தே...”

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.