சண்முகம், மனைவியோடு திண்ணைக்கு வந்தார். அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அலறினார். பிள்ளையார் தம்பியின் தலையை வருடிவிட்டபடியே தழுதழுத்த குரலில் பேசினார்.
“ஒருத்தன இழந்துட்டாலும், இன்னொருத்தன வாங்கிக்கிட்டேன்! அந்தவரைக்கும் சந்தோஷம் ! வயசானாத்தான் புத்தியே வருது: ருக்குமணி -உள்ளே போயி நீ சேனை கொடுத்த உன் மகனோட அலங்கோலத்தப் பாரும்மா... எந்த நேரத்துல பெத்தேனோ...”
வெளியே நின்ற வேப்பமரத்தடிக் கூட்டத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. அந்த சத்தத்திற்குரியவர் உள்ளே வந்தார். ராமசாமிக் கிழவர்.
“ஒக்காரும் மச்சான்...”
அவர் உட்காரவில்லை. சுயம்பு கிடந்த அறைக்குள் போனார். பத்து நிமிடத்திற்குப் பிறகு திரும்பி வந்தார். அந்தக் காலத்து பஞ்சாயத்து தீர்ப்பு போலவே திட்ட வட்டமாய்ப் பேசினார்:
“சுயம்பு தானாச் செய்யலை! எந்த ஆம்புளைக்கு அப்படி சேலை கட்ட மனசு வரும்...? வளையல் போடுன்னு யாராவது சொன்னாக் கூட, நமக்கு எப்படிப் பட்ட கோபம் வருது...? ஒருத்தன் அதுவும் ஒனக்குப் பொறந்தவன் இப்படி ஆயிட்டாமுன்னால், ஏதாவது சூட்சுமம் இருக்கும்! பேய்க்குப் பார்த்தாச்சு! இனிமேயாவது நோய்க்குப் பார்க்கணும்!”
“எனக்கு ஒண்ணுமே ஒடமாட்டேங்கு மாமா...”
“அதுக்குக் காரணம், நீ அவன எதிரியா பார்க்கிறியே தவிர, அவனுக்குள்ளேயே ஏதோ ஒண்ணு. அவனுக்கு எதிரியா இருக்கிறத பார்க்கலை. பள்ளிக்கூடத்துல மொதல்ல வந்து ஊர், ஜனங்களுக்கெல்லாம் பிடிச்சுப் போன, அவனே இப்படி ஆயிட்டான்னா, எவன் ஆகமாட்டான்னேன்...! அதனால கோணச்சத்திரத்துல புதுசா வந்திருக்கிற நர்ஸிங் ஹோமிலே நாளைக்கே சேர்த்திடு. என் கொழுந்தியாள் மகன்தான் கட்டியிருக்கான். நானும் சொல்றேன். மரகதத்துக்கு கலியாணம் நடக்கு முன்னாலேயே, இவனுக்கு சொகமாயிடணும். ஆனாலும் ஐயாயிரம் ரூபாயாவது கறந்துடுவான். ரூபாய பெரிசா நினைக்காதே!”