குழந்தைகள். வயிறு தள்ளிய பிள்ளைகள். உடம்புகளில் கோடுகள் போட்டது போன்ற நரம்பு மனிதர்கள். அதே சமயம், ஏழ்மை, உடையையும் உடைத்தெறியும் பருவக்காரிகள்.
சுயம்பு அவள் பின்னால் பீதியோடு நடந்தான். ஓடப்போவதுபோல் திரும்பிப் பார்த்தான். அவளோ, ஆங்காங்கே பாத்திரங்களை விளக்கிக் கொண்டும், பல் தேய்த்துக்கொண்டும், திட்டு முட்டாக நின்ற தேகக்காரர் களிடம் குசலம் விசாரித்தாள். அவர்கள் இது யார் என்று கேட்கமாட்டார்களா என்ற ஆவல். ‘என் மகள்’ என்று சொல்ல வேண்டுமென்ற ஆசை. எல்லோரும் அவளை சிநேகிதத்தோடு பார்த்தார்களே தவிர, பேசவில்லை. பேசுவதற்கு நேரமும் இல்லை.
அந்தச் சேரிக்குள்ளேயே ஒரு சேரி மாதிரியான பகுதி. அதன் முன்னால், பச்சைப் பச்சையாய் உருண்டை உருண்டையாய் தண்ணிரை மறைக்கும் குட்டை. கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தில், தமிழன் எப்போது மூத்துப் பிறந்தானோ அப்போதே தோண்டப்பட்டது போன்ற ஊத்தக்குட்டை, அதன் மேல் வாசம் செய்த கொசுக்கள், உருண்டை உருண்டையாய் அங்குமிங்குமாய் பறந்துகொண்டிருந்தன. இங்கேயும் குடிசைகள், ஆனால், அந்தக் குடிசைகளைவிட இளைத்துப் போனவை. ஓரிரண்டு தவிர, அனைத்திலும் தவழ்ந்து போக வேண்டும். மரப்பலகையில் சுவர்க் குடிசைகள். தகர நெளிவுகளில், வாழும் இடங்கள். இவற்றிற்கு இடையிடையே எச்சில் தையல் இலைகள். குழந்தைகளின் அசிங்கங்கள்.
இப்போது அவளையும் சுயம்புவையும், எல்லாக் கண்களும் மொய்த்தன. சுயம்புவை இனங்கண்டு கொண்டவர்கள் போல், அவர்கள் பார்த்த பார்வைக்கும் கேட்ட கேள்விகளுக்கும் ‘என் மகள்’ என்றாள். முக்கிய சிநேகிதர்களிடம் மட்டும் அவனைப் பற்றிச் சிறிது விவரம் சொன்னாள். சிலதுகள், சுயம்புவின் தோளைத் தட்டி குதூகலித்தனர். சிலருக்குப் பொறாமைக.ட வந்தது. ஆனால் அத்தனைபேரும் சுயம்புவோடு சுற்றிச் சுற்றி நடந்தார்கள். வழியில் ஒரு தூக்கலான மேடு. அங்கிருந்த குடிசையிலிருந்து குருவக்கா இறங்கினாள். அந்தக் காலத்து சிரட்டைப் பொட்டு மாதிரியான முகம். அசல் வட்டம். நிதானமான பார்வை, ஆவேசம் கொடுக்காத அழுத்தமான கண்கள். அலி ராணி. அதற்கேற்ற கம்பீரம். சுயம்புவை நோட்டமிட்டாள். அந்தப் பெண்ணிடம் கேட்டாள்:
“பாவம் பச்சை மதலை... எங்க அலைஞ்சுதுடி...”