பச்சை அம்மாளை அந்தப் படத்திற்கு முன்னால் உட்கார வைத்துவிட்டு, தானும் உட்கார்ந்தாள். அவள் “ம்... ம்... சொல்லு” என்றாள். பச்சையம்மாள் விறுவிறுப்பாகவும் வெறுவெறுப்பாகவும் பேசினாள்.
“அம்மா என்னக் கட்டிப் பிடிச்சு அழுதாள். அப்பா எப்பவோ செத்துப் போயிட்டாராம். நான் தோளுல தூக்கி வளர்த்த தம்பி, தொலைவில நின்னே கண்ணக் கசக்கினான். பெண்டாட்டி அவன் காதுல ஏதோ சொன்னாள். அப்புறம் அவன் என் பக்கமா வந்து எங்கே இருக்கப் போறேன்னு அந்நியமாகக் கேட்டான். ‘சொந்த வீட்ல இருக்காமல் எந்த வீட்டுக்கடா போவான்னு’ அம்மா திருப்பிக் கேட்டாள். ‘இப்படியா சேலை கட்டி வாறது? இனிமேல், எல்லாப் பயல்வளும் என்வேட்டிய கூட சேலை மாதிரிதானே பார்ப்பாங்கன்’னு சொன்னான். அம்மாதான் என் வயிற்றுல ஒரு மாடு பிறந்தாலும் எனக்கு பிள்ளதாண்டா... உனக்கு உடன்பிறப்புதாண்டான்னு அழுதழுது தம்பிக்குச் சொன்னாள். என்கிட்ட ஏதோ ரத்த வாடையில் ஓடிவரப் போன, பிள்ளைகளை அவன் பொண்டாட்டி ரெண்டு சாத்து சாத்தினாள். அதுக்குமேல அங்க இருக்க பிடிக்கல. நான் வீட்டுக்குள் போயி, வெளிப்படையாவே கெஞ்சினேன். ‘தம்பி, தம்பி... நமக்கு பொதுச் சொத்து, அஞ்சு ஏக்கர், ஆத்துப் பாசனம். நீயும் நானும் பிறக்கறதுக்கு முன்னால இருந்த முப்பாட்டன் சொத்து... சூடு போட்ட அப்பா வாங்குன சொத்துகூட வேண்டாம். முப்பாட்டன் சொத்துல சரி பாகத்தையும் கேக்கல. கணக்குப்படி அக்காவுக்கு அஞ்சு லட்சம் வரும். ஆனால் எனக்குத் தேவையில்ல. அக்கா பொண்ணா யிருந்தாலே, கல்யாணம் காட்சின்னு அப்பா மூணு லட்சமாவது செலவழிச்சிருப்பாரு. நீ, அவ்வளவையும் தர வேண்டாம். ஒனக்கு எது தோணுதோ, எவ்வளவு தோணுதோ அதக் கொடுடா, அக்காவால இப்ப எதுவுமே முடியல. நீ கொடுக்கிற பணத்தை பாங்கில போட்டுட்டு மெட்ராஸ்ல மொடங்கிக்கிறேன். உனக்கு விடுதலை பத்திரம் வேணுமுன்னாலும் எழுதிக் கொடுக்கேன்னு நான் கெஞ்சினேன். கையை திருவோடு மாதிரி வச்சுக்கிட்டு அழுதேன்...”
“சரி. அழாதே! எனக்கு நடந்ததுதான் ஒனக்கும் நடந்திருக்கு. ஒன் தம்பி அதுக்கு என்ன சொன்னான்?”
“சாட்டைக் கம்ப எடுத்துட்டு அடிக்க வந்தான். அப்புறம் ‘நீ நம்ம குடும்பத்துக்கு ஏற்படுத்தியிருக்கிற கேவலத்துக்கு நீதான் நஷ்டஈடு தரணும்’னான். பதினைஞ்சு வருஷம் கழிச்சுப் பார்க்குற, அந்தக் காலத்து அண்ணனை ஒரு அரைமணி நேரத்துலயே கழுத்தப் பிடிச்சுத் தள்ளினான். 'அம்மாவை மட்டுமாவது நல்லா வச்சுக்கடா’ன்னு தள்ளாத அம்மாவைக்