பச்சையம்மா, மூலையின் இரு சுவர்ப் பிரிவில் சாத்தி வைத்த கோரைப் பாயை எடுத்தாள். ஒரு உதறு உதறி, விரித்தாள். உறை இல்லாத தலையணையை எடுத்துப் போட்டாள். சுயம்புவை கொஞ்சம் கொஞ்சமாய் அங்குலம் அங்குலமாய்ச் சரித்து அதில் உட்காரவைத்தாள். இதற்குள் அங்கேயும் ஒரு சிறு கூட்டம். பாயிலும் தரையிலுமாய்ப் படர்ந்தார்கள். பல்வேறு வகை பெண்ணுடம்புக்காரிகள். வெளியே துருத்திய கண்காரிகள். அவையே ஒடுங்கிப் போன நடுத்தரங்கள். விஜயன் என்ற பூர்வாசிரமப் பெயரைக் கொண்ட விஜயா சுயம்புவின் தோளில் கை போட்டாள். அச்சடித்த சிவப்பு. புள்ளியோ முடியோ இல்லாத முகம் ஆழ்ந்த கண்கள். ஒவ்வொருத்தி கண்ணும் உலகின் அத்தனை துக்கக் கடல்களிலும் அந்தக் கண்களைப் புரட்டி குறுகத் தரித்து மீண்டும் பொருத்தியது போல் தோன்றின.
இதற்குள், எவளோ ஒருத்தி எங்கிருந்தோ ஒரு பானைத் தண்ணிரைக் கொண்டு வந்தாள். பச்சையம்மா கையால், தண்ணிரைத் தொட்டு, கதவுக்கு வெளியே ஒரு உதறு உதறிவிட்டு, மேற்கு பக்கமுள்ள பூசைத் திட்டின் முன்னால் உட்கார்ந்தாள். மத்தியில் சேவல்மீது ஆசனம் போட்ட திரிசூலி. அவளுக்கு ஒரு பக்கம் பிள்ளையார். மறுபக்கம் புல்லாங்குழல் கிருஷ்ணன். உடம்பில் கட்டிகள் வந்ததுபோல் தோன்றிய மண்சுவரில், அவள் அப்பாவின் படம். அவள் கற்பூரத்தை ஏற்றப்போனபோது, “பச்சையம்மா...” என்ற சப்தம் கேட்டுத் திரும்பினாள். கன்னத்தில் தப்பளம் போடுபவளைப் பார்த்தாள். குருவக்கா... அங்கிருந்தே பேசினாள்.
“மனசே கேக்கலைடி ஊர்ல இருந்து திரும்பி வாறியே. ஒன்னப்பத்தி ஒரு வார்த்தை நான் கேக்கலை பாரு. மொதல்ல அம்மாவுக்கு பூசையை முடி. இவளும் நல்லா இருக்கணும்னு கும்பிடு... அப்புறமா வாறேன்!”
“ஒட்காருக்கா... ஒங்கிட்ட சொல்லாட்டா தலையே வெடிச்சுடும்...”
குருவக்கா, சுயம்புவின் பக்கத்தில் போய், அவன் தோளைத் தட்டிவிட்டபடியே உட்கார்ந்தபோது, பச்சையம்மா தாம்பாளம் போன்ற தகரத்தில் கற்பூரம் ஏற்றி அம்மாவைச் சுற்றிச் சுற்றி வட்டமிட வைத்தாள். அந்தக் கற்பூரம் மாதிரியே, உள்ளுக்குள் எரிந்தவளுக்கு குருவே விபூதி கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. அவள் சைகை செய்ததும், குருவக்காவும் எழுந்தாள். எல்லோருக்கும் விபூதி குங்குமம் கொடுத்தாள். பிறகு, அவளது கவனத்திற்காகவே காத்திருந்த