கட்டிப்பிடிச்சுக் கதறிட்டு ஒரு ஆஸ்பத்திரில ரூம் எடுத்து தங்கினேன். பணம் வாங்க எடுத்துட்டுப்போன பணமெல்லாம், நாசமாப் போயிட்டு. இவள் எனக்கு மகளா கிடைச்சது எல்லாத்தையும் சரிக்கட்டிட்டு... இந்த சந்தோஷமே போதும்...”
“இவளப்பத்தி. நா ஒங்கிட்ட அப்புறம் விவரமா பேசணும். சாயங்காலமா பேசிக்கலாம்.” குருவக்கா எழுந்தாள். எழுந்தபடியே ஆறுதலாகவும், அன்பாகவும் பேசினாள்.
“ஒம்பேரு என்னடி..”
“சுயம்பு...”
“நல்ல பேரு. நல்லவளாவே இரு. ஏண்டி தடி முண்டங்களா... இவளுக்கு எவளாவது நாஷ்டா வாங்கிக் கொடுங்களேண்டி... அவளையே நாஷ்டா மாதிரி பாக்கீங்க...”
குருவக்காவிற்கு, மற்றவள்கள் மரியாதை காட்டி எழுந்திருக்கவில்லை தான். ஆனாலும், அவர்கள் கால்களை குறுக்கிக்கொண்டு, அவளுக்கு வழிவிட்டதில், ஒரு தோழமை உறவும், அந்தத் தோழமைக்குத் தொண்டாற்ற அவர்கள் தயாராய் இருப்பது போலவும் தோன்றின. இதற்குள், ஒருத்தி, நாஷ்டா கொண்டு வந்தாள். குருவக்கா, அவசரப்பட்டு திட்டிவிட்டமே என்பது மாதிரி உதட்டைக் கடித்து நின்றுவிட்டு, போய்விட்டாள். இதற்குள், பச்சையம்மா நாஷ்டா வாங்கி வந்தவளுக்குக் காசை நீட்ட, அவள் மறுக்க ஒரு செல்லச் சண்டையே நடந்தது. “போங்கடி... என் மகள் கொஞ்சம் தூங்கட்டும்” என்று அத்தனை பேரையும் விரட்டி விட்டாள். கதவைச் சாத்திவிட்டாள்.
சுயம்பு, அழப்போனான். அந்த வாய்க்குள் பச்சையம்மா இட்டிலித் துண்டை எடுத்து வைத்தாள். மசால்வடைத் துண்டை சட்டினியில் புரட்டி ஊட்டினாள். அவன் வீட்டுக் கோழி கூ.ட கொத்த விரும்பாத வாடை. வெளியே துப்பப் போனவன், அம்மாவின் கண்களில் பொங்கிய பாசத்தைப் பார்த்துவிட்டு, துடித்த துடிப்பைக் கண்டுவிட்டு, அப்படியே விழுங்கினான். வாந்தி வரப்போனது. வீட்டை நினைத்து அழப்போனான். அந்த அழுகையையே துக்கத் துண்டுகளாக மாற்றி, உணவுத் துண்டுகளோடு கலந்து உண்டான்.
பச்சையம்மா, வீட்டைப் பெருக்கினாள். விரித்த பாயை எடுத்து உதறியபடியே மீண்டும் அதை