“எங்க ஊருக்கு பக்கத்து ஊருக்கா... நம்மள மாதிரியே அவளுக்கும் சூடு போட்டு சொரணை கொடுத்திட்டாங்க. அதனால என் பின்னாலயே வந்திட்டாள். காலேஜ் படித்திட்டு இருந்திருக்காள்.”
“அடிப்பாவி... பச்சை மண்ணு, பானையா மாறு முன்னே எடுத்துட்டு வந்திட்டியேடி...”
“எக்கா எந்தப் பேச்சுப் பேசினாலும் இந்தப் பேச்ச பேசாதே... இங்கயே அஞ்சு வருஷமா இருக்கேன்... இன்னுமா நீ என்னப் புரிஞ்சுக்கலை!”
“தப்பா நினைக்காதடி பச்சையம்மா. இவள இங்க கொண்டு வரதுக்கு நமக்கு தகுதி இல்லியேன்னுதான் கேட்டேன். சரி மொதல்ல வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ! அப்புறம் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
சுயம்புவைச் சுற்றி நின்றவர்கள் இப்போது அவனைச் சிறிது, வித்தியாசமாகப் பார்த்தார்கள். பித்துப் பிடித்த அவனை, சித்தம் கலைக்க, சிலர் அவன் சேலையை கையால் இஸ்திரி போட்டார்கள். முகத்தை, முந்தானையால் துடைத்தார்கள். அவனைப் பார்த்து, அங்குமிங்குமாய் அடப்போன ‘ஒருத்தியை’ பலர் இடுப்பில் இடித்தார்கள். குரலைத் தவிர அனைத்துமே பெண்மையின் வெளிப்பாடுகள். அந்தக் குரல்களில் ஒரு சிலதான் தடித்தவை. பூ வைத்த இந்திராக்கள். பொட்டு வைத்த மலர்க்கொடிகள். கண்சிமிட்டும் மோகனாக்கள். இவர்களைப் பெண் கூட்டத்திலிருந்து பிரிப்பது கடினம். இதனால்தானோ என்னவோ, அருகருகே உள்ள சேரிகளில் உள்ள பெண்களில் இருந்து இவர்களைப் பிரிக்க முடியவில்லை.
பச்சையம்மா தன் மகளைப் பெருமை பிடிபடாமல் பார்த்தாள். அதே சமயம் தோழிகள் போட்ட அச்சச்சோவின் சிறுமையில் சிக்கியும் தவித்தாள். அவள் கிட்டத்தட்ட சுயம்புவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டே ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த தனது குடிசைக்குப் போய் கதவைத் திறந்தாள். உள்ளே நோட்டமிட்டாள். வைத்தது வைத்தபடியே இருந்தன. தகரப் பெட்டி செளக்கியமே. நார்க்கூடையும், அதற்குள் இருந்த சில்லறைப் பொருட்களும் நலமே. ஈயப்போணிகள், ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள். ஏதோ நோய் பிடித்ததுபோல் தூசி துகள்களான ‘கிருமிகளைக்’ காட்டின.